Showing posts with label தமிழனின் வரலாறு !. Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு !. Show all posts

Thursday, 23 October 2014

"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

By: ram On: 07:52
  • Share The Gag
  • நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
     பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
     என்று சொல்வதுண்டு...

    பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
     என்று சொல்லலாம் என்றாலும்,
     "தலைமுறை தலைமுறையாக"
    என்பதே உண்மை பொருள் ஆகும்.

    அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
    பரன் + பரை = பரம்பரை
     நமக்கு அடுத்த தலைமுறைகள்:
    நாம்
     மகன் + மகள்
     பெயரன் + பெயர்த்தி
     கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
     எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

     நமக்கு முந்தைய தலைமுறைகள்:

    நாம் - முதல் தலைமுறை

     தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

     பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

     பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

     ஓட்டன் + ஓட்டி -
    ஐந்தாம் தலைமுறை

     சேயோன் + சேயோள் -
    ஆறாம் தலைமுறை

     பரன் + பரை - ஏழாம் தலைமுறை

     ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
     என்று கொண்டால்,
    ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
    ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
     (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
    ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
     பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
     என்று பொருள் வரும்.
    எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
     இப்படி உறவு முறைகள் இல்லை..

    இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

    உங்கள் நண்பர்களுக்கு தெரிய பகிரவும் !!

    Wednesday, 22 October 2014

    தந்தை பெரியார் - வாழ்க்கை வரலாறு

    By: ram On: 02:12
  • Share The Gag



  • 1. இளமைப் பருவம்

    காவும் கழனியும் நிறைந்த காவிரி ஆற்றின் அரவணைப்பில் அமைந்திள்ள ஊர் ஈரோடு. மஞ்சளும், மாவும் செழித்த நகரம் ஈரோடு. யாரோடும் வம்பு பேச்மல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார் வெங்கட்ட நாயக்கர்.

    வெங்கட்ட நாயக்கர் இளம் வயதிலேயே அப்பாவை இழந்தார். வசதியற்ற குடும்பம். எனவே, அவர் தனது பன்னிரண்டு வயதிலேயே கூலி வேலை பார்த்தார். கூலி பெற்றுத்தான் கூழ்கூடிக்க வேண்டிய நிலை. அவ்வளவு வறுமை. பதினெட்டு வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் சின்னத்தாயம்மை.

    வெங்கட்ட நாயக்கர் – சின்னத்தாயம்மை வாழ்க்கை வண்டி ஓடிற்று. வண்டிமாடு வைத்துப் பிழைத்தார். நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. வண்டி மாட்டை விற்றார். அந்தப் பணத்தைக்கொண்டு சிறிய அளவில் பலசரக்குக் கடையொன்றைத் துவக்கினார். கணவருடன் சேர்ந்து அவரது மனைவி சின்னத்தாயம்மையும் உழைத்துப் பாடுபட்டார். நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்தார். உளுந்து, துவரை போன்ற பருப்பு வகைகள் உடைத்துக் கொடுத்தார். ஆமணக்கு விதையினின்று எண்ணெய் எடுத்து அதைக் காசாக்கினார். தம்பதிகள் இருவருமே சோம்பல் இன்றிப் பாடுபட்டார்கள். ஓய்வு இன்றி உழைத்தார்கள். நாளடைவில் கொடிகட்டிப் பறந்தார். சூரியனைக்கண்ட பனி விலகுவதுபோல் வறுமை அவர்களை விட்டு அகன்றது. செல்வமும் செழிப்பும் சேர்ந்தது.

    உழைப்பினால் உயர்ந்த உன்னத தம்பதிகள் அவர்கள்.

    வணிகப் பெருந்தகை வைணவ மத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார். பக்திப் பெருக்கினால் இராமாயணம், பாகவதம் போன்ற கதைகளைக் கேட்டு மகிழ்ந்தார். தமது இல்லத்திலேயே பாகவதர்களுக்கும், சாதுக்களுக்கும் விருந்து அளித்து அவர்களை வணங்கி மகிழ்ந்தார்.

    திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. அதன் பின்னர் பத்து ஆண்டுகள் அவர்களுக்குக் குழந்தைபேறு கிட்டவில்லை. கோயில்களுக்குச் சென்று இறைவனைக் கும்பிட்டார்கள். இருவரும் விரதங்கள் மேற்கொண்டார்கள். அவர்களது பக்தி மேலும் வளரலாயிற்று.

    இந்தச் சூழலில் 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓர் ஆண் மகவு பிறந்தது. கிருஷ்ணசாமி என்று பெயரிட்டு அகமகிழ்ந்தார்கள். அதன் பிறகு 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி இரண்டாவது மகன் பிறந்தான். அந்த மகனுக்கு இராமசாமி என்று பெயர் சூட்டி கொண்டாடினார்கள்.

    இராமசாமிக்கு இரண்டு தங்கைகள் உண்டு. அவர்கள் பொன்னுத்தாய -ம்மாள், கண்ணம்மாள் ஆவார்கள்.

    இராமசாமி சின்னபாட்டி வீட்டில் வளர்ந்தான். பாட்டி அவனை தத்துப்பிள்ளையாக தந்துவிடுமாறு வெங்கட்ட நாயக்கரிடம் கேட்டார். அவர் தர மறுத்துவிட்டார். என்றாலும் இராமசாமி அந்தப் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்.

    பாட்டி வீட்டில் இராமசாமி அடித்த லூட்டிகள் ஏராளம். பாட்டி கண்டிப்புடன் வளர்க்காமல் கனிவுடன் மட்டுமே வளர்த்தார்கள். தாய்ப்பால் கிடையாது. தினமும் இராமசாமி ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தான். பாட்டி வீட்டில் பெரும்பாலும் பழையதும், சுண்டக்கறியும்தான். உணவாக்க் கிடைத்தது. தின்பண்டம் வாங்கித்தின்பதற்கு வழி போதாது.

    இராமசாமிக்கு ஆறுவயது நிரம்பியது. பாட்டியின் வீட்டில் வாழ்ந்த பையன் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றித் திரிந்தான். யாருக்கும் அடங்காதவனாக மாறினான். பெற்றோர்கள் மனம் வருந்தினர். எனவே இராமசாமியை சின்னப்பாட்டி வீட்டினின்று அழைத்து வந்துவிட்டார்கள்.

    இராமசாமியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். பள்ளிக்கூடத்தில் அவன் போக்கிரி, குறும்புக்காரன் என்று பெயரெடுத்தான். படிப்பு அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. மற்ற பையன்களுடன் சண்டையிடுவான். சட்டென்று கோபத்தில் அவர்களை அடித்தும் விடுவான். அடிபட்ட மாணவன் ஆசிரியரிடம் முறையிடுவான்.

    இராமசாமியைத் திருத்தும் நோக்கத்துடன் ஆசிரியர் அவனிடம்,

    “இனி பிள்ளைகளை அடிப்பதில்லை” என்று ஆயிரம் தடவை எழுதிவா என்று தண்டனை வழங்குவார். இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல நூற்றுக்கணக்கான தடவைகள். இராமசாமி தண்ட எழுத்து வேலை (இம்போசிசன்) எழுதியது உண்டு.

    இராமசாமி பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது இடைவேளையின் போது தண்ணீர் குடிப்பதற்காக ஆசிரியர் வீட்டுக்கு போவதுண்டு. அவர்கள் வீட்டில் தண்ணீரை அண்ணாந்து குடிக்கச் சொல்வார்கள். அப்படிக் குடிக்கும்போது மூக்கில் தண்ணீர் சிந்தி இருமல் வந்துவிடும். சட்டை முழுவதும் நனைந்துவிடும். அதுமட்டுமல்ல, அவன் தண்ணீர் குடித்த தம்ளரை கழுவி எடுத்துச் செல்வார்கள். அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் அவன் ஆசிரியர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் செல்வதில்லை.

    பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடித்தான் சிறுவன் இராமசாமி.

    பெற்றோர்கள் ஆசிரியர்கள் வீட்டில் மட்டும்தான் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் சைவ உணவு சாப்பிடுபவர்கள். மற்றவர்கள் மாமிச உணவு சாப்பிடுபவர்கள். எனவே அங்கு தண்ணீர் வாங்கிக் குடிக்கத் தடை போட்டிருந்தனர் பெற்றோர். முஸ்லீம், கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டில் தண்ணீர் குடித்தது அவன் வீட்டாருக்குத் தெரிந்துவிட்டது. அதுமட்டுமல்ல, அவர்கள் கொடுத்த திண்பண்டங்களையும் அவன் வாங்கிச் சாப்பிட்டுவிட்டான்.

    செய்தி அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது. செந்தேளை கொட்டியதுபோல் அவர்கள் துடித்துப் போனார்கள். கோபத்தால் முகம் சிவந்து போனார்கள். சிறுவன் இராமசாமியை அடித்தார்கள். மேலும் கடுமையாக தண்டனை வழங்கினார்கள்.

    இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டது. இரண்டு தோள்களிலும் இரண்டு விலங்குகள் பூட்டப்பட்டன. இதைத் தூக்கிச் சுமந்து அவன் பள்ளி செல்ல வேண்டும். இப்படி பதினைந்து நாட்கள் விலங்கு பூட்டப்பட்டு துன்பத்திற்கு ஆளானான் இராமசாமி.

    இராமசாமி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் படித்தான். பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆங்கிலப் பள்ளியில் படித்தான். படிப்பறிவு வளரவில்லை; பகுத்தறிவு வளர்ந்தது.

    பத்தாவது வயதிலேயே பகவானைப் பணிபவர்களைப் பார்த்து பரிகசிக்கத் தொடங்கினான் அவன். ஆனால், தந்தையைப் போல் தொழிலில் நாட்டம் இருந்தது. பார்த்தார் தந்தை; சிந்தித்தார். பிறகு சிறுவனின் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவனைத் தொழிலில் பழக்கினார். பன்னிரண்டாவது வயதிலேயே ‘தரகு’ வர்த்தகத்தில் அவன் தலைசிறந்து விளங்கினான்.

    கடையில் அவன் சுறுசுறுப்பாக வேலை செய்தான்.

    மூட்டைகளுக்கு விலாசம் போடிவது, சரக்குகள் ஏலம் போடிவது இவைதான் இராமசாமி செய்த வேலை ஆகும்.

    சிறுவன் பேச்சில் குறிப்பாக வியாபாரப்பேச்சில் கெட்டிக்காரன். யாரிடமும் விவாதம் செய்து வெற்றி பெறுவான். அவன் வீட்டில் எப்போதும் சாமியார்கள், புராணக்கதை சொலுபவர்கள். பிராமணர்கள், சமயப் புலவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் மகிழும் வண்ணம் விருந்து தடபுடளாக நடந்துகொண்டேயிருக்கும. இது சிறுவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை. காரணமில்லாமல் அவர்கள்மீது வெறுப்பு வளர்ந்தது. அதன் காரணமாக கடவுள்மீது வெறுப்பும், கசப்பும் வளர்ந்தது. கடவுள் இல்லை. ஆனால் இந்தக் கூட்டம் கடவுள் இருப்பதாகக் கற்பனை செய்து, வயிறு வளர்த்து வருகிறார்கள் என்று எண்ணினான்.

    எல்லாம் கடவுள் செயல். தலைவிதிப்படிதான் நடக்கும் என்பதை அவன் எதிர்த்தான். அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து கிண்டல் செய்வது அவன் வழக்கமாயிற்று.

    இராமசாமி தன் கடைக்குச் செல்லும் வழியில் இராமநாத ஐயர் என்பவர் ஒரு கடை வைத்திருந்தார். அவர் எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்பதில் தீவிர நம்பிக்கைகொண்டவர். இராமசாமி அவரை மடக்க எண்ணினான். ஒரு நாள் அவர் கடையின் முன்பக்கம் நிழலுக்காகப் போடப்பட்டிருந்த தட்டியின் மூங்கில் காலைத் தட்டிவிட்டான். மூங்கில் தட்டி ஐயரின் தலையில் விழுந்துவிட்டது.

    “ஏன் இப்படி செய்தாய்?” என்று இராமநாத ஐயர் கோபித்துக் கொண்டார்.

    இராமசாமி புன்னகை செய்தான். தலைவிதிப்படி நடந்துள்ளது, எனவே தட்டி உங்கள் தலையில் விழுந்துவிட்டது. அப்புறம் “என்னை ஏன் திட்டுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு சிட்டாய்ப் பறந்துவிட்டான் பன்னிரண்டு வயது சிறுவன் இராமசாமி.

    பள்ளியில் படிக்கும்போது பிற மத்த்தினர் வீட்டில் தண்ணீர் குடித்ததற்காகவும், தின்பண்டங்கள் சாப்பிட்டதற்காகவும் கைவிலங்கு, கால்விலங்கு போடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் சுயமரியாதைச் சுடராக, பகுத்தறிவு பகலவனாக விளங்கினார்.

    தாழ்த்தப்பட்ட மக்களின் விலங்குகளை ஒடுப்பதற்காக அன்று அந்தச் சிறுவயதில் விலங்கு பூட்டப்பட்டாரோ என்னவோ?

    எப்போதும் பஜனையும், பக்திப் பாடல்களும், ஆழ்வரார் பாசுரங்களும், கதா காலட்சேபங்களும் நிறைந்த இல்லத்தில் இருந்து கேள்விகள் கேட்டுக்கேட்டு மக்களை சிந்திக்கச் செய்த சமூக சீர்திருத்தவாதியாக அந்தச் சிறுவன் பரிணாமித்தான்.

    அந்தச் சிறுவன்தான் ‘வெண்தாடி வேந்தர்’ என்று போற்றப்பட்டவர். விவேகமும், வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவர்.

    தேரோடும் வீதிகளில் சுற்றித் திரிந்த அந்தப் பையன்தான்
    ஊரோடு ஒத்துப்போகாமல், உயரிய சிந்தனைகளை
    முன்வைத்து தமிழர்களின் தலைவராய்
    உயர்த்தான் – அவர்தான் பெரியார்; ஈவெ.ரா. பெரியார்.

    பள்ளி வாழ்க்கையைப் போல் அவரது பகுத்தறிவு வாழ்க்கையும் சுவையானது.

    2. இல்லற வாழ்கை



    “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பார்கள். பன்னிரண்டு வயதுச் சிறுவன் இராமசாமியின் வாழ்க்கையில் அது உண்மையாயிற்று.

    பள்ளிப்படிப்பு ஏறவில்லை. எனவே கடையில் வேலை செய்யப் பழக்கினார் தந்தை. அங்கு தனது பேச்சுத்திறத்தால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தான் இராமசாமி. அவனது உற்சாகமான வார்த்தைகளால் வந்தவர்கள் வியப்படைந்தார்கள். ஐந்து ரூபாய் பொருளை எட்டு ரூபாய்வரை விலை ஏற்றி விற்கும் சாமர்த்தியம் இராமசாமிக்கு கைவந்த கலையாயிற்று.

    “சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது”
    என்ற குறளுக்கு ஏற்ப இராமசாமியின் வாதத்திறமை வருவோரை வாயடைக்கச் செய்தது.

    வீட்டில் பாகவதர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், வேத பிராமணர்கள் என எப்போதும் கூட்டம் நிரம்பிக் காணப்படும். அவர்கள் சொல்லும் இராமாயணம், மகாபாரதக் கதைகளைக் கேட்பார். தர்க்கம் செய்வார். அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு பதிலை சொல்லி சமாளிப்பார்கள். அப்பொழுதிலிருந்தே இராமசாமிக்கு இந்துமதப் புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் இவற்றின்மீது வெறுப்பு உண்டாயிற்று. அதன் காரணமாக அவர் கடவுள் இல்லை, கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்றும் உறுதியாக நம்பினார்.

    வணிகத்தில் அவரது பேச்சுத்தன்மையால் வியாபாரம் பெருகிற்று.

    கடைக்கு கணக்கு எழுதவும் தந்தையார் கற்றுக் கொடுத்தார். கடைக்கு வருபவர்களிடமும் தர்க்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. அந்த இளம்வயதிலேயே அவரது பேச்சுத்திறன் குறிப்பாக தர்க்கம் செய்யும் ஆற்றல் தடையின்றி வளர்ந்தது. பின்னாளில் அவரது அழுத்தந் திருத்தமாக அரசியல் சொற்பொழிவுகளுக்கு அதுவே காரணமாயிற்று.

    வியாபார நேரம்போக, ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் ஊர்சுற்றத் தொடங்கினார். காவிரி ஆற்றுப் படுகையில் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்து களித்தார். பெற்றவர்கள் கவலைப்பட்டார்கள்.

    விளையாட்டாய்க் காலம் ஓடிற்று. இராமசாமிக்கு வயது பத்தொன்பதாயிற்று. திருமணம் செய்து வைத்துவிட்டால் பொறுப்பு வந்துவிடும் என்று பெற்றோர்கள் எண்ணினர்.

    இராமசாமிக்கு பெண் பார்க்கத் தொடங்கினார்கள். இராமசாமி தனது உறவுக்காரப் பெண் நாகம்மையை மணக்க விரும்பினார். சிறுவயது முதலே நாகம்மையுடன் ஓடி ஆடி விளையாடி மகிழ்ந்தவர். எனவே, அவர் அந்தப் பெண்ணைத்தான் மணப்பேன் என்று பிடிவாதம் செய்தார்.

    பெற்றோர்கள் சொல்லுக்கு எதிர்சொல் சொல்லாத கடுமையான காலம் அது. அவர்கள் பார்த்துப் பேசும் பழக்கமும் கிடையாது. அந்தச் சூழ்நிலையில் இராமசாமி தன் விருப்பத்தில் உறுதியாக நின்றார். புரட்சியின் வேர்கள் அப்போதே முளைவிடத் தொடங்கின.

    நாகம்மைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கத் தெடங்கினர். இராமசாமி படிக்காதவர்; ஊர் சூற்றித்திரிபவர்; எனவே அவருக்குத் திருமணம் செய்து வைக்க நாகம்மை வீட்டில் சம்மதிக்கவில்லை.

    நாகம்மையின் வயது 13. ஆனால், அவருக்குப் பார்த்த மாப்பிள்ளையின் வயதோ 50க்கு மேல். அதுவும் இரண்டு முறை திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். எனவே இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நாகம்மை.

    “மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன்” என்று நாகம்மையார் தன் அப்பா, அம்மாவிடம் தெளிவாக்க் கூறிவிட்டார்.

    வேறு வழி இன்று நாகம்மையின் பெற்றோர் இராமசாமிக்கே தங்கள் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தனர்.

    போராட்டமே வாழ்க்கை நியதியாக்க் கொண்டவர் தந்தை பெரியார். இளமையில் திருமணம்கூட போராட்டங்களுக்கும், புகைச்சல்களுக்கும் இடையெதான் நடைபெற்றது.

    அன்றைய நாளில் இளம் வயது திருமணம் நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    இராமசாமியை இனி நாமும் மரியாதையுடன் பெரியார் என்றே அழைப்போம். திருமணம் நடந்து விட்டாலே பெரிய ஆள்தானே!

    பெரியார் – நாகம்மையார் இல்லறம் பிறர்க்கு எடுத்துக்காட்டாகவே அமைந்தது எனலாம்.

    கணவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொண்டார் நாகம்மையார்.

    பெரியார் வீட்டில் யாரும் மாமிச உணவு சாப்பிடமாட்டார்கள். ஆனால், பெரியாரோ மட்டன் பிரியாணி என்றால் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார். அவருக்கு சைவ உணவு பிடிக்காது. எனவே கணவருக்காகத் தனியாக அசைவ உணவு சமைப்பார் நாகம்மையார்; நாகம்மையார் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். சைவ உணவுதான் சாப்பிடுவார். பெரியாருக்கு விரதம் இருப்பதெல்லாம் கட்டோடு பிடிக்காது.

    ஒருமுறை நாகம்மையார் சமைத்து வைத்திருந்த சைவ உணவில் அவர் அறியாதவாறு ஒரு எலும்புத்துண்டை மறைந்து வைத்துவிட்டார் பெரியார். நாகம்மையார் பூஜை முடித்து சாப்பிட உட்கார்ந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே எலும்புத்துண்டு தலை நீட்டியது. நாகம்மையார் பதறிப்போனார். இது தன் கணவன் வேலை எனபதையும் உணர்ந்து கொண்டாள்.

    அன்றோடு நாகம்மையின் விரதம் போயிற்று. சைவ உணவு சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது.

    பெரியார் கொஞ்சம் கொஞ்சமாக தன் இல்லத்தரசியாரை தன் கொள்கைகளுக்கு மாறச் செய்தார். தனது தந்திரமிக்க நடவடிக்கைகளால் நாகம்மையார் கோயிலுக்குச் செல்வதையும் அறவே தடுத்து நிறுத்திவிட்டார்.

    நண்பர்களுடன் ஆற்றங்கரையில் அமர்ந்து, அரட்டை அடிப்பது மட்டும் ஓயவில்லை. அங்கேயிருந்துகொண்டே சாப்பாடு தயார் செந்து கொடுத்துவிடு என்று நாகம்மையாருக்குச் சொல்லிவிடுவார். நாகம்மையாரும் ருசியாக சமைத்து பாத்திரங்களில் நிரப்பி சாப்பாடு கொடுத்து அனுப்புவார். இப்படி செய்வது மாமனார், மாமியாருக்குப் பிடிக்காது என்றாலும் அவர்களுக்குத் தெரியாமல் சாப்பாடு கொடுத்து விடுவார். இவ்வாறு பெரியாரின் விருப்பங்களுக்கு ஏற்ப சிறந்த மனைவியாக அவர் வாழ்ந்து வந்தார்.

    பெரியார் மிகுத்த சிக்கனவாதி; காசை எண்ணி எண்ணிதான் செலவழிப்பார். வீட்டில் சமையலிலும் சிக்கனம் வேண்டும் என்று எண்ணுவார். தேவையில்லாமல் இரண்டு காய்கள் வைத்தால் கோபித்துக்கொள்வார். காபிக்குப் பால் அதிகம் ஊற்றினால், பாலை ஏன் இப்படி வீணாக்குகிறாய்? சிறிது பால் ஊற்றினாலே போதுமே என்பார்.

    சில வேளைகளில் “பாலைவிட மோரே உடம்புக்கு நல்லது” என்றுகூட சொல்லுவார்.

    நாகம்மையார் பெரியாரின் எல்லாக் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த உணவில் சிக்கனத்தை மட்டும் கடைபிடிக்க தயக்கம் காட்டினார். வீட்டிற்கு வருபவர்களுக்கு வயிறார உணவு பரிமாறி உபசரித்தார். அதே சமயம் வேண்டுமென்றே பெரியாருக்கு சிறிதளவே காய்கறிகள் வைப்பார். இதனால் நாளடைவிலை நாகம்மையார் செய்யும் சமையலில் மட்டும் அவ்வளவாக தலையிடுவதில்லை.

    இரவு பன்னிரண்டு மணிக்கு வந்தாலும், நாகம்மையார் சுடச்சுட உணவு தயாரித்து விருந்தளித்து விடுவார். அவரது விருந்தோம்பல் பணியைப் பாராட்டாத தமிழ்நாட்டுத் தலைவர்கள் இல்லையென்றே சொல்லிவிடலாம்.!

    பெரியாரின் பொதுவாழ்விலும் நாகம்மையார் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் மேற்கொண்ட எல்லாப் பராட்டங்களிலும் கலந்துகொண்டார். பெரியார் அவர்களின் பொது வாழ்வின் வெற்றிக்கு அவர் பெரிதும் உதவினார்.

    திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார். ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது. பெரியார் மனைவிக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் ஒருநாள் -

    வாழ்க்கையில் வெறுப்புற்று, பெரியார் வீட்டைவிட்டு வெளியேறினார். யாரிடமும் சொல்லாமல்கொள்ளாமல் ஊர் விட்டுப் புறப்பட்டார்.

    பெரியார் துறவியானார்!

    இந்நிகழ்ச்சியை வேடிக்கை என்பதா? வேதனை என்பதா?

    எந்தக் குறையும் இல்லை.

    செல்வமும் செழிப்பும் செறிந்த வாழ்க்கை …

    Thursday, 4 September 2014

    காணாமல் போன விளையாட்டுகள்!

    By: ram On: 08:31
  • Share The Gag
  • அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

    உப்புக்கோடு

    village games
    உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

    மெல்ல வந்து கிள்ளிப்போ!

    2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
    கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
    விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

    கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

    மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

    ‘காயே கடுப்பங்கா
    கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
    உப்பே புளியங்கா
    ஊறவச்ச நெல்லிக்கா
    கல்லன் வாரான் காரைக்குடி
    கல்லை நீயும் கண்டுபிடி’

    என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

    பூப்பறிக்க வருகிறோம்!


    2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

    கழங்கு

    பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

    ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
    தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
    தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
    அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
    அம்மியிடுக்குல படுத்திட்டேன்
    படுத்த பாயில சுருட்டிட்டேன்
    ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
    இளந்தம் பழுக்கவும்
    பழுத்து தின்னவும்
    மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
    மூன்றாம் படிக்கட்டு
    நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
    நாகம் பழங்கொத்தி
    அஞ்சான்: ஐப்பால் அரங்கு
    பம்பாய் சிலுக்கு
    ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
    அள்ளிப்போட்டு நொறுக்கு
    ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
    எட்டாம் நம்பர் சேல

    இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
    ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
    கிட்டுவதேயில்லை!

    Wednesday, 3 September 2014

    நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

    By: ram On: 18:14
  • Share The Gag
  • 1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

    WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
    · தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

    · எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

    · கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

    · புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

    · சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

    · பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

    · நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

    · தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

    · ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

    · அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

    · காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

    · சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

    · உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

    · எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

    · எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

    · அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

    · உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

    எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

    · எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

    · வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

    · எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

    · உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

    · நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

    · இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

    · இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

    'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' - கதையுடன் விளக்கம்!

    By: ram On: 18:14
  • Share The Gag
  • தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.

    'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே'


    ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப்பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன. இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக்கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.

    ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.

    ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது 'ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத்தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது 'நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது.

    பின்னர் சொன்னது 'அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனது திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. எனவே நான்தான் சிவம் ஆகிய இறைவன். நீ அந்த சிவத்திற்குக் கட்டுண்ட ஆன்மா என்பதை மறவாதே. நீ இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் ஆன்மா. உன் இயக்கம் நின்று விட்டால் என்னைப் போல சிவம் ஆகி விடுவாய். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய் உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

    இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. இயங்காமல் இருந்தாலும் கல்தான் இறைவன் ஆகிய தலைவன்; இயங்கிக் கொண்டே இருந்தாலும் பறவை ஒரு ஆன்மாவே ஆகும். ஆன்மா அடிக்கடி சிவத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் சிவத்திற்கு கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதற்காக உருவாக்கப் பட்டதுதான் இந்தப் பழமொழி. இனி சரியான பழமொழி இது தான்.


    'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
    (கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா)

    Wednesday, 27 August 2014

    தமிழர்களின் எண்ணிக்கை..?

    By: ram On: 22:08
  • Share The Gag
  • உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை
    (அந்நாடுகளின் மொத்த சனத்தொகை அடைப்புக்குறிக்குள்)

    1. அங்கோலா – Angola -10 (மொத்த மக்கள் தொகை 18,498,000)
    2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் – United States of America – 200,000 (மொத்த மக்கள் தொகை 314,659,000)
    3. அயர்லாந்து – Ireland 2,000 (மொத்த மக்கள் தொகை 4,515,000)
    4. அர்ஜென்ரினா – Argentina 100 (மொத்த மக்கள் தொகை 40,276,000)
    5. அல்ஜீரியா – Algeria 100 (மொத்த மக்கள் தொகை 34,895,000)
    6. அன்ரிகுவா-பார்புடா – Antigua and Barbuda 1,000 (மொத்த மக்கள் தொகை 88,000)
    7. ஆப்கானிஸ்தான் – Afganistan 100 (மொத்த மக்கள் தொகை 28,150,000)
    8. ஆர்மினியா – Armenia 300 (மொத்த மக்கள் தொகை 3,083,000)
    9. ஆஸ்திரியா – Austria 1,500 (மொத்த மக்கள் தொகை 8,364,000)
    10. ஆஸ்திரேலியா – Australia 100,000 (மொத்த மக்கள் தொகை 21,293,000)
    11. இத்தாலி – Italy 5,000 (மொத்த மக்கள் தொகை 59,870,000)
    12. இந்தியா – India 81,000,000 (மொத்த மக்கள் தொகை1,198,003,000)
    13. இந்தோனீசியா – Indonesia 300,000 (மொத்த மக்கள் தொகை 229,965,000)
    14. இலங்கை – Sri Lanka 6,000,000 (மொத்த மக்கள் தொகை 20,238,000)
    15. இஸ்ரேல் – Israel 100 (மொத்த மக்கள் தொகை 7,170,000)
    16. ஈராக் – Iraq 1,000 (மொத்த மக்கள் தொகை 30,747,000)
    17. ஈரான் – Iran 500 (மொத்த மக்கள் தொகை 74,196,000)
    18. உகண்டா – Uganda 100 (மொத்த மக்கள் தொகை 32,710,000)
    19. உக்ரெயின் – Ukraine 500 (மொத்த மக்கள் தொகை 45,708,000)
    20. உஸ்பெகிஸ்தான் – Uzbekistan 300(மொத்த மக்கள் தொகை 27,488,000)
    21. எகிப்து – Egypt 1,000 (மொத்த மக்கள் தொகை 82,999,000)
    22. எதியோப்பியா – Ethiopia 100 (மொத்த மக்கள் தொகை 82,825,000)
    23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு – United Arab Emirates 200,000 (மொத்த மக்கள் தொகை 4,595,000)
    24. எரித்திரியா – Eritrea 100 (மொத்த மக்கள் தொகை 5,073,000)
    25. எல்சால்வடோர் – El Salvador 100 (மொத்த மக்கள் தொகை 6,163,000)
    26. எஸ்ரோனியா – Estonia 500 (மொத்த மக்கள் தொகை 1,340,000)
    27. ஐஸ்லாந்து – Iceland 25 (மொத்த மக்கள் தொகை 323,010)
    28. ஓமான் – Oman 50,000 (மொத்த மக்கள் தொகை 2,845,000)
    29. கம்பூசியா – Cambodia 1,000 (மொத்த மக்கள் தொகை 14,805,000)
    30. கயானா – Guyana 10,000 (மொத்த மக்கள் தொகை 762,000)
    31. கனடா – Canada 300,000 (மொத்த மக்கள் தொகை 33,573,000)
    32. கஸாக்ஸ்தான் – Kazakhstan 100 (மொத்த மக்கள் தொகை 15,637,000)
    33. காட்டார் – Qatar 10,000 (மொத்த மக்கள் தொகை 1,409,000)
    34. கானா – Ghana 500 (மொத்த மக்கள் தொகை 23,837,000)
    35. கியூபா – Cuba 100 (மொத்த மக்கள் தொகை 11,204,000)
    36. கிர்கிஸ்தான் – Kyrgyzstan 100 (மொத்த மக்கள் தொகை 5,482,000)
    37. கிரிபாத்தி – Kiribati 25 (மொத்த மக்கள் தொகை 98,000)
    38. கிரேக்கம் – Greece 10,000(மொத்த மக்கள் தொகை 11,161,000)
    39. கினீயா – Guinea 1,000 (மொத்த மக்கள் தொகை 10,069,000)
    40. கினீயா பிஸ்ஸாவ் – Guinea-Bissau 100 (மொத்த மக்கள் தொகை 1,611,000)
    41. குரோசியா – Croatia 100 (மொத்த மக்கள் தொகை 4,416,000)
    42. குவாதமாலா – Guatemala 100 (மொத்த மக்கள் தொகை 14,027,000)
    43. குவைத் – Kuwait 10,000(மொத்த மக்கள் தொகை 2,985,000)
    44. கென்யா – Kenya 300 (மொத்த மக்கள் தொகை 39,802,000)
    45. கொங்கோ சயர் – Congo – Zaire 25 (மொத்த மக்கள் தொகை 66,020,000)
    46. கொமொறொஸ் – Comoros 100 (மொத்த மக்கள் தொகை 676,000)
    47. வட கொரியா – North Korea 100 (மொத்த மக்கள் தொகை 23,906,000)
    48. தென்கொரியா – South Korea 500 (மொத்த மக்கள் தொகை 48,333,000)
    49. கொலம்பியா – Colombia 500 (மொத்த மக்கள் தொகை 45,660,000)
    50. சமோவா – Samoa 100 (மொத்த மக்கள் தொகை 179,000)
    51. சவூதி அரேபியா – Saudi Arabia 50,000 (மொத்த மக்கள் தொகை 25,721,000)
    52. சாம்பியா – Zambia 2,500 (மொத்த மக்கள் தொகை 12,935,000)
    53. சான் மறினோ – San Marino 25 (மொத்த மக்கள் தொகை 31,000)
    54. சிங்கப்பூர் – Singapore 300,000 (மொத்த மக்கள் தொகை 4,737,000)
    55. சிம்பாப்வே – Zimbabwe 250 (மொத்த மக்கள் தொகை 12,523,000)
    56. சியாரா லியோன் – Sierra Leone 1,000 (மொத்த மக்கள் தொகை 5,696,000)
    57. சிரியா – Syria 500 (மொத்த மக்கள் தொகை 21,906,000)
    58. சிலி – Chile 100 (மொத்த மக்கள் தொகை 16,970,000)
    59. சீசெல்சு – Seychelles 9,000 (மொத்த மக்கள் தொகை 84,000)
    60. சீனா – China 5,000 (மொத்த மக்கள் தொகை 1,353,311,000)
    61. சுரினாம் – Suriname 130,000 (மொத்த மக்கள் தொகை 520,000)
    62. சுலோவாக்கியா – Slovakia 100 (மொத்த மக்கள் தொகை 5,406,000)
    63. சுலோவேனியா – Slovenia 100 (மொத்த மக்கள் தொகை 2,020,000)
    64. சுவாசிலாந்து – Swaziland 5,000 (மொத்த மக்கள் தொகை 1,185,000)
    65. சுவிற்சர்லாந்து – Switzerland 60,000 (மொத்த மக்கள் தொகை 7,568,000)
    66. சுவீடன் – Sweden 12,000 (மொத்த மக்கள் தொகை 9,249,000)
    67. சூடான் – Sudan 100 (மொத்த மக்கள் தொகை 42,272,000)
    68. செக் – Czech 100 (மொத்த மக்கள் தொகை 10,369,000)
    69. செர்பியா – Serbia 200 (மொத்த மக்கள் தொகை 9,850,000)
    70. செனகல் – Senagal 25 (மொத்த மக்கள் தொகை 12,534,000)
    71. சைப்ரஸ் – Cyprus 500 (மொத்த மக்கள் தொகை 871,000)
    72. சோமாலியா – Somalia 25 (மொத்த மக்கள் தொகை 9,133,000)
    73. டென்மார்க் – Denmark 15,000 (மொத்த மக்கள் தொகை 5,470,000)
    74. தஜிக்கிஸ்தான் – Tajikistan 100 (மொத்த மக்கள் தொகை 6,952,000)
    75. தாய்லாந்து – Thailand 10,000 (மொத்த மக்கள் தொகை 67,764,000)
    76. தான்சானியா – Tanazania 250 (மொத்த மக்கள் தொகை 43,739,000)
    77. துர்க்மெனிஸ்தான் – Turkmenistan 50 (மொத்த மக்கள் தொகை 5,110,000)
    78. துருக்கி – Turkey 500 (மொத்த மக்கள் தொகை 74,816,000)
    79. துனீசியா – Tunisia 100 (மொத்த மக்கள் தொகை 10,272,000)
    80. தென் ஆபிரிக்கா – South Africa 750,000 (மொத்த மக்கள் தொகை 50,110,000)
    81. தைவான் – Taiwan 100 (மொத்த மக்கள் தொகை 25,300,000)
    82. நமீபியா – Namibia 25 (மொத்த மக்கள் தொகை 2,171,000)
    83. நவுறு – Nauru 100 (மொத்த மக்கள் தொகை 10,000)
    84. நியுசிலாந்து – New Zealand 30,000 (மொத்த மக்கள் தொகை 4,266,000)
    85. நெதர்லாந்து – Netherlands 12,000 (மொத்த மக்கள் தொகை 16,592,000)
    86. நேபாளம் – Nepal 500 (மொத்த மக்கள் தொகை 29,331,000)
    87. நைஜர் – Niger 25 (மொத்த மக்கள் தொகை 15,290,000)
    88. நைஜீரியா – Nigeria 2,500 (மொத்த மக்கள் தொகை 154,729,000)
    89. நோர்வே – Norway 15,000 (மொத்த மக்கள் தொகை 4,812,000)
    90. பராகுவே – Paraguay 25 (மொத்த மக்கள் தொகை 6,349,000)
    91. பல்கேரியா – Bulgaria 200 (மொத்த மக்கள் தொகை 7,545,000)
    92. பனாமா – Panama 500 (மொத்த மக்கள் தொகை 3,454,000)
    93. பஹ்ரெயின் – Bahrain 7,000 (மொத்த மக்கள் தொகை 791,000)
    94. பஹாமாஸ் – Bahamas 200 (மொத்த மக்கள் தொகை 342,000)
    95. பாகிஸ்தான் – Pakistan 1,000 (மொத்த மக்கள் தொகை 180,808,000)
    96. பாபுவா-நியுகினீயா – Papua-New Guinea 500 (மொத்த மக்கள் தொகை 6,732,000)
    97. பார்படாஸ் -Barbados 1,000 (மொத்த மக்கள் தொகை 256,000)
    98. பாலஸ்தீனம் – Palestine 200 (மொத்த மக்கள் தொகை 3,336,000)
    99. பிரான்ஸ் – France 50,000 (மொத்த மக்கள் தொகை 62,343,000)
    100. பிரிட்டன் – United Kingdom 300,000 (மொத்த மக்கள் தொகை 61,565,000)
    101. பிரெஞ்சு கயானா – French Guyana 1,000 (மொத்த மக்கள் தொகை 170,000)
    102. பிரேசில் – Brazil 100 (மொத்த மக்கள் தொகை 193,734,000)
    103. பிலிப்பைன்ஸ் – Philippines 200 (மொத்த மக்கள் தொகை 91,983,000)
    104. பின்லாந்து – Finland 3,000 (மொத்த மக்கள் தொகை 5,326,000)
    105. பிஜி – Fiji 125,000 (மொத்த மக்கள் தொகை 849,000)
    106. புர்கினோ பாசோ – Burkina Faso 100 (மொத்த மக்கள் தொகை 15,757,000)
    107. புறுணை – Brunei 1,500 (மொத்த மக்கள் தொகை 400,000)
    108. பூடான் – Bhutan 100 (மொத்த மக்கள் தொகை 697,000)
    109. பெர்முடா – Bermuda 100 (மொத்த மக்கள் தொகை 63,000)
    110. பெரு – Peru 100 (மொத்த மக்கள் தொகை 29,165,000)
    111. பெல்ஜியம் – Belgium 12,000 (மொத்த மக்கள் தொகை 10,647,000)
    112. பொலிவியா – Bolivia 1,000 (மொத்த மக்கள் தொகை 9,863,000)
    113. பொற்சுவானா – Botswana 1,000 (மொத்த மக்கள் தொகை 1,950,000)
    114. போர்த்துக்கல் – Portugal 500 (மொத்த மக்கள் தொகை 10,707,000)
    115. போலாந்து – Poland 500 (மொத்த மக்கள் தொகை 38,074,000)
    116. மசிடோனியா – Macedonia 100 (மொத்த மக்கள் தொகை 2,042,000)
    117. மலாவி – Malawi 500 (மொத்த மக்கள் தொகை 15,263,000)
    118. மலேசியா – Malaysia 2,250,000 (மொத்த மக்கள் தொகை 27,468,000)
    119. மால்ரா – Malta 100 (மொத்த மக்கள் தொகை 409,000)
    120. மாலி – Mali 250 (மொத்த மக்கள் தொகை 13,010,000)
    121. மாலை தீவு – Maldives 2,000 (மொத்த மக்கள் தொகை 309,000)
    122. மியான்மா – Myanmar 600,000 (மொத்த மக்கள் தொகை 50,020,000)
    123. மெக்சிகோ – Mexico 3,000 (மொத்த மக்கள் தொகை 109,610,000)
    124. மொல்டோவியா – Moldovia 25 (மொத்த மக்கள் தொகை 3,604,000)
    125. மொறிசியசு – Mauritius 126,000 (மொத்த மக்கள் தொகை 1,288,000)
    126. மொறித்தானியா – Mauritania 100 (மொத்த மக்கள் தொகை 3,291,000)
    127. மொறொக்கோ – Morocco 100 (மொத்த மக்கள் தொகை 31,993,000)
    128. மொனாகோ – Monaco 50 (மொத்த மக்கள் தொகை 33,000 )
    129. யப்பான் – Japan 200 (மொத்த மக்கள் தொகை 127,156,000)
    130. யேமன் – Yemen 500 (மொத்த மக்கள் தொகை 23,580,000)
    131. ரஷ்யா – Russia 5,000 (மொத்த மக்கள் தொகை 140,874,000)
    132. ரினிடாட்-ரொபாகோ – Trinidad and Tobago 100,000 (மொத்த மக்கள் தொகை 1,339,000)
    133. லக்செம்போர்க் – Luxembourg 1,000 (மொத்த மக்கள் தொகை 486,000)
    134. லற்வியா – Latvia 500 (மொத்த மக்கள் தொகை 2,249,000)
    135. லாவோஸ் – Lao 1,000 (மொத்த மக்கள் தொகை 6,320,000)
    136. லிதுவானியா – Lithuania 100 (மொத்த மக்கள் தொகை 3,287,000)
    137. லிபியா – Libya 500 (மொத்த மக்கள் தொகை 6,420,000)
    138. லெசொத்தோ – Lesotho 500 (மொத்த மக்கள் தொகை 2,067,000)
    139. லெபனன் – Lebanon 5,000 (மொத்த மக்கள் தொகை 4,224,000)
    140. லைபீரியா – Liberia 500 (மொத்த மக்கள் தொகை 3,955,000)
    141. வங்காள தேசம் – Bangladesh 1,000 (மொத்த மக்கள் தொகை 162,221,000)
    142. வத்திக்கான் நகர் – Vatican City 20 (மொத்த மக்கள் தொகை 1,000)
    143. வியற்னாம் – Viet Nam 3,000 (மொத்த மக்கள் தொகை 88,069,000)
    144. ஜமைக்கா – Jamaica 30,000 (மொத்த மக்கள் தொகை 2,719,000)
    145. ஜிபுற்றி – Djibouti 1,000 (மொத்த மக்கள் தொகை 864,000)
    146. ஜெர்மனி – Germany 40,000(மொத்த மக்கள் தொகை 82,167,000)
    147. ஜோர்டான் – Jordan 4,000 (மொத்த மக்கள் தொகை 6,316,000)
    148. ஜோர்ஜியா – Georgia 25 (மொத்த மக்கள் தொகை 4,260,000)
    149. ஸ்பெயின் – Spain 500 (மொத்த மக்கள் தொகை 44,940,000)

    Monday, 23 December 2013

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் இந்தியர் பாபி ஜிண்டா!?

    By: ram On: 23:51
  • Share The Gag



  • அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ளது இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு அமெரிக்க இந்தியர் பாபிஜிண்டால் போட்டியிட உள்ளார்.இந்த ஜிண்டாலின் பெற்றோரான அமர் மற்றும் ராஜ் ஜிண்டால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்களை தற்போதைய சர்ச்சையின் போது(ம) முன்னிலைப் படுத்தப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    வரும் 2016ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், அமெரிக்க இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. குடியரசு கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய லூசியானா மாநில கவர்னருமாக பாபி ஜிண்டால் உள்ளார்.சமீப காலமாக லூசியானாவில் கல்வி உதவி தொகை வழங்குதல், வருமான வரியை நீக்கியது, அதிபர் ஒபாமா கொண்டு வந்துள்ள மருத்துவ உதவி திட்டத்துக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே இவரது செல்வாக்கை அதிகரித்துள்ளது.


    இதன் மூலம் அடுத்த அதிபர் தேர்தலில் லூசியானா, லோவா, நியூஹாம்ப் ஷியர் பகுதி மக்களிடம் அதிக ஒட்டுகளை பெற முடியும் என்றும் இவரது கடினமான உழைப்பு மற்றும் மக்கள் செல்வாக்கு மூலம் அடுத்த அதிபர் தேர்தலில் இவர் குடியரசு கட்சி வேட்பாளராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து இருந்தது நினைவு கூற்த்தக்க்து..

    Tuesday, 17 December 2013

    உபசரிப்பு முறையை தெரிந்து கொள்ள ..

    By: ram On: 18:26
  • Share The Gag




  • உபசரிப்பு முறையை தெரிந்து கொள்ள ..

    தமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை!!!


    1. உப்பு (Salt)

     2. ஊறுகாய் (Pickles)

     3. சட்னி பொடி (Chutney Powder)

     4. பச்சை பயிர் கூட்டு (Green Gram Salad)

     5. பருப்பு கூட்டு (Bengal Gram Salad)

     6. தேங்கய் சட்னி (Coconut Chutney)

     7. பீன்… பல்யா (Fogath)

     8. பலாப்பழ உண்டி (Jack Fruit Fogath)

     9. சித்ரண்ணம் (Lemon Rice)

     10. அப்பளம் (Papad)

     11. கொரிப்பு (Crispies)

     12. இட்லி (Steamed Rice Cake)

     13. சாதம் (Rice)

     14. பருப்பு (Dal)

     15. தயிர் வெங்காயம் (Raitha)

     16. ரசம் (Rasam)

     17. உளுந்து வடை (Black Gram Paste Fired Cake)

     18. கத்திரிக்காய் பக்கோடா (Brinjal Pakoda)

     19. இனிப்பும் புளிப்பும் கலந்த கூட்டு (Sweet And Sour Gravy)

     20. காய்கறி பொரியல்(Vegetable Fry)

     21. காய்கறி அவியல் (Vegetabel Mix)

     22. வெண்டைக் காய் பக்கோடா (Ladies Finger Pakoda)

     23. கத்திரிக்காய் சாம்பார் (Brinjal Sambar)

     24. இனிப்பு (Sweet)

     25. வடைகறி (Masalwada Curry)

     26. இனிப்பு தேங்கய் போளி (Sweet Coconut Chapati)

     27. கிச்சடி (Vegetable Upma)

     28. இஞ்சி துவையல் (Sour Ginger Gravy)

     29. பாயசம் (Sweet)

     30. தயிர் (Curds)

     31. மோர் (Butter Milk )

    நம் முன்னோர்களின் ரகசியம்?

    By: ram On: 18:08
  • Share The Gag


  • டெல்லியில் குதுப்மினார் அருகில் இந்த இரும்பு தூண் உள்ளது.. இதை உலக விஞ்ஞானிகள் ஏன் இன்னும் துருப்பிடிக்கவில்லை என ஆராய்ந்தனர்.. பதில் காண முடியவில்லை.


    கி.பி.500ல் சந்திரகுப்த மன்னரால் வைக்கப்பட்டது.. இந்த துருப்பிடிக்காத இரும்பு தயாரிப்பதை நாம் கண்டுபிடித்தால் நமது உலகக்கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். ஏனெனில் எவர்சில்வர் கொண்டு ராட்சச இயந்திரங்களை தயாரிக்க முடியாது செலவு மிக அதிகமாகும்...


    முன்னோர்களின்  இந்த ரகசிய கண்டுபிடிப்பை நம் முன்னோர்களே மறைத்துவிட்டனர்.

    Sunday, 15 December 2013

    பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- பகுதி 2

    By: ram On: 11:29
  • Share The Gag


  • இரண்டாம் பகுதி


    கட்டுரையின் முதல் பகுதியில் முன்னுரை கொடுத்திருக்கிறேன். முதல் பகுதியையும் ஏனைய பழமொழிக் கட்டுரைகளையும் படிப்பது பயன் தரும்.


    வாழுகிற பெண்ணும் வாழாத பெண்ணும்


    மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி
    மெலிந்தவளுக்கு மெத்தப் பலன், மேனி மினுக்கெட்டவளுக்கு மெத்தக் கசம்
    மேலைக்குத் தாலி கட்டுகிறேன்,, கழுத்தே சுகமே இரு என்றார்போல
    மேலைக்குத் வாழ்க்கைப்படுகிறேன்,, கழுத்தே சுகமே இரு
    மேனி எல்லாம் சுட்டாலும் விபசாரம் செய்கிறவள் விடாள்
    மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்
    வரப்பு ஏறித் தாண்ட மாட்டாள், அவள் பேர் தாண்டாய் (110)
    வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்
    வருகிற வரும்படி எல்லாம் பூசாரிக்கு, சந்தடியெல்லாம் கங்காளம்மைக்கு
    வறுமைக்கு மூதேவியும் செல்வத்துக்குச் சீதேவியும்
    வாய் மதத்தால் வழக்கு இழந்தாள்
    வாலிபத்தில் இல்லாத மங்கையை வயது சென்றபின் என்ன செய்கிறது?
    வாலிபத்தில் தேடாத தேவடியாள் வயது போனபின் தேடப்போகிறாளா?
    வாழாத பெண்ணுக்கு மை ஏண்டி, பொட்டு ஏண்டி, மஞ்சள் குளி ஏண்டி?
    வாழாத பெண்ணைத் தாழ்வாய் உரைக்காதே
    வாழாப் பெண் தாயோடெ
    வாழுகிற பெண்ணை தாய் கெடுத்தது போல
    வாழைப் பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள் (120)
    வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்


    கைம்பெண்சாதி, எருமையில் கறவை பழகினாற் போல
    கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம்
    கைம்பெண்டாட்டி பெற்ற கழிசடை
    கைம்பெண்டாட்டி வளர்த்த கழுக்காணி
    கைம்பெண்டாட்டி பெற்ற பிள்ளையானாலும் செய்யுஞ் சடங்கு சீராய் செய்யவேண்டும்
    எட்டுக் கிழவரும் ஒரு மொட்டைக் கிழவியைக் கட்டிக் கொண்டார்கள்
    எட்டும் இரண்டும் தெரியாத பேதை (நாத்தை)
    ஒரு வீடடங்கலும் பிடாரி/ பஜாரி
    ஏர் உழுகிற பிள்ளை இளைத்துப் போகிறது, பரியம்போட்ட பெண்ணைப் பார்த்து வளர்
    ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம் (130)
    ஏழைக்கும் பேழைக்கும் காடுகாள் அம்மை
    ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்
    ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா?
    ஆமுடையானைக் கொன்ற அறநீலி
    ஆமுடையான் அடித்ததற்குக் கொழுநனைக் கோபித்துக் கொண்டாளாம்
    ஆமுடையான் அடித்ததது பெரிதல்ல; சக்களத்தி சிரிப்பாள் என்று அழுகிறேன்
    ஆமுடையான் செத்த பின்பு அறுதலிக்குப் புத்தி வந்தது
    ஆமுடையான் செத்தபோதே அல்லலுற்ற கஞ்சி
    ஆமுடையான் செத்தவளுக்கு மருத்துவச்சி தயவேன்?


    சீதேவியும் மூதேவியும்



    சீதை பிறக்க இலங்கை அழிய (140)
    சீதேவியுடன் மூதேவி பிறந்தாற் போல
    சீராளன் கல்யாணத்தில் முன்றுபேர் பெண்டுகள் மாரோடே மார் தள்ளுது
    சீரங்கத்துக்குப் போகிறவன் வழியிலெ பாரியைப் பறிகொடுத்தது போல
    சீர்கேடனுக்குக் வாக்குப்பட்டு திரிச்சீலை துணிக்கு வாதைப் படாமல் இருந்தேன், சீராளனைப் பெற்ற பிறகு திரிச்சீலை துணிக்கு வருத்தமாச்சுது
    சீலை இல்லை என்று சின்னாயி வீட்டுக்குப் போனாளாம், அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்
    நாட்ட ஆளப் பெண் பிறந்தாலும் போட்ட புள்ளி தப்பாது
    நாணம் இல்லாத சிறுக்கிக்கு நாலு திக்கும் வாசற்படி
    நாணம் இல்லாத வாத்தி நாலு திக்குக்கும் கூத்தி
    நாணம் இல்லாத பெண் நகைப்புக்கு இடம் வைப்பாள்
    பூவுள்ள மங்கையாம் பொற்கொடியாம் , போன இடமெல்லாம் செருப்படியாம் (150)
    பூ விற்றவளை பொன் விற்கப் பண்ணூவேன்


    பெண்சாதி


    பெண்சாதி இருந்தால் புது மாப்பிள்ளை
    பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவியது போல
    பெண்சாதி கால் விலங்கு, பிள்ளை சுள்ளாணி
    பெண்சாதி கால்கட்டு, பிள்ளை வாய்க்கட்டு
    பெண்சாதி சொந்தம், போகுவரத்துப் புறம்பே
    பெண்சாதி பேச்சைக் கேட்டவன் பேய் போல அலைவான்
    பெண்சாதி முகத்தைப் பார்க்காவிட்டாலும், பிள்ளை முகத்தைப் பார்க்க வேண்டும்
    பெண்சாதியைக் குதிரை மேல் ஏற்றி, பெற்ற தாயின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலம்
    பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு (160)
    பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் விட்டது
    பெண்டாட்டி குதிர் போல அகமுடையான் கதிர்போல
    பெண்டாட்டியுடன் கோபித்துப் பரதேசம் போவாருண்டோ
    பெண்டுகளுக்கு பெற்றோரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் மூப்பில்லை
    பெண்டுகள் இருந்த இடம் சண்டைகள் பெருத்திடும்
    பெண்டுகள் சமர்த்து அடுப்பங்கரையில்தான்
    பெண்டுகள் சோற்றுக்குத் தண்டமில்லை
    பெண்டுகள் வைத்தியம்
    பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு
    பெண் அரம்பைக் கூத்து போய், பேய்க் கூத்து ஆச்சுதே (170)
    பெண் ஆசை ஒரு பக்கம், மண் ஆசை ஒரு பக்கம்
    பெண் ஆசை கொண்டு பெருக்கத் தவிக்கிறது
    பெண் ஆணையைத் தொடரும் பேரானையைப்போல
    பெண்ணின் குணமும் அறிவேன், சம்பந்தி வாயும் அறிவேன்


    தங்கமே தங்கம்

    பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்
    பெண்ணுக்கு ஒரு கும்பிடு வில்லுக்கு ஒரு கும்பிடு
    பெண்ணின் குணம்தான் சீதனம்
    பெண்ணின் பெண்தான் சீதனம்
    பெண்ணுக்கு பொன்னிட்டுப் பார், சுவருக்கு மண்ணிட்டுப் பார்
    பெண்ணுக்கு பொன்னாசை கொள்ளும் பேரணங்கு 180
    பெண்ணுக்கு போட்டுப் பார், மண்ணுக்குப் பூசிப்பார்
    பெண்ணுக்குப் போய்ப் பொன்னுக்குப் பின்வாங்கலாமா?
    பெண்ணுக்கு மாமியாரும் பிள்ளைக்கு வாத்தியாரும்
    பெண்ணுக்கும் பொன்னுக்கும் தோற்பு உண்டா?
    பெண்ணும் இல்லாமல் ஆணும் இல்லாமல் பெருமரம் போல் வளருகிறது
    பெண்ணைக் கட்டிக் கொடுப்பார்கள், பிள்ளை பெறுவதற்குப் பிணைபடுவார்களா?
    பெண்ணைக் கொண்டு பையன் போனான், பிள்ளை பெற்றுச் சிறுக்கி நாயானாள்
    பெண்ணைத் திருத்தும் பொன் (190)
    பெண்ணைப் பிழை பொறுக்கப் பெற்ற தாய் வேண்டாமா?
    பெண்ணை வேண்டும் என்றால் இளியற் கண்ணை நக்கு
    பெண் என்று பிறந்தபோதே புருடன் பிறந்திருப்பான்
    பெண்ணோடு ஆணோடு பிறக்காத பெரும்பாவி
    பெண் படையும் பலமும் பெருக்கத் தவிக்கிறதோ?
    பெண் புத்தி கேட்கிறவன் பேய்
    பெண் மூப்பான வீடு பேரழிந்துபோம்
    பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி
    பொன்னாலே மருமகளானாலும், மண்ணாலே ஒரு மாமியார் வேண்டும்
    பொன்னையும் புடவையையும் நீக்கிடில் பெண் மலக்கூடு (200)
    போக்கற்றாள் நீக்கற்றாள், பொழுது விடிந்து கந்தை அற்றாள்...............

    பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

    By: ram On: 11:17
  • Share The Gag




  • பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.


    சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும் கடுமையான, பாலியல் தொடர்பான பழமொழிகளையும், படிப்பதற்கு நாராசமாக உள்ள பழமொழிகளையும் கூடுமான அளவுக்கு தவிர்த்துவிட்டேன்.


    பெண் பல ரூபங்களில் இருப்பவள். தாயாகவும் மனைவியாகவும், மகளாகவும்,மருமகளாகவும், மாமியாரகவும், மாமியாகவும், அத்தை/சித்தியாகவும், மிக அபூர்வமாக வேசியாகவும் வருகிறாள். பெண்களைப் பற்றிய சுமார் 300 பழமொழிகளை மூன்று பகுதிகளாகத் தருகிறேன். இவைகளை ஆராய்ச்சிப் படிப்பாக எடுப்பவர்களுக்கு இது பயன் தரும். நேரம் கிடைக்கும்போது வேற்று மொழிப் பழமொழிகளுடன் ஒப்பிட்டும் காட்டுவேன்.


    முதல் பகுதி


    குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும்
    நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது
    தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்
    மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது
    ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
    பெண் என்றால் பேயும் இரங்கும்
    பெண் புத்தி பின் புத்தி
    ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
    பணம் படைத்த சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள்
    ஆடத்தெரியாத பெண் தெருக்கோணல் என்றாளாம் (கூடம் போதாது என்றாளாம்) 10


    அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்
    அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றானாம்
    அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்
    ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்
    ஒத்த கணவனும் ஒரு சிறு நெல்லும் இருந்தால் சித்திரம் போல் குடித்தனம் செய்வேன் என்றாளாம்
    ஓடுகாலி வீடு மறந்தாளாம்
    பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்
    பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ !
    ஒய்யாரக் கொண்டையாம் தலக்குள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்
    தாயா ? பேயா ?
    பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்
    பேயானாலும் தாய் (20)


    பெற்றவளுக்கு பிள்ளை பாரமா?
    அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
    தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை
    தாய்க்குப் பின் தான் தாரம்
    பொம்பளை (பெண்) சிரிச்சா போச்சு பருத்தி விரிச்சா போச்சு
    குனிந்து சேவித்து நிமிர்ந்து வாழ்த்திக் கொண்டாளாம்
    அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை
    குறத்தி பிள்ளை பெற்றாளாம் குறவன் மருந்து சாப்பிட்டானாம்
    மகள் பிறக்கும் முன் பூட்டிக்கோ, மருமகள் வருவதற்கு முன் சாப்பிட்டுக்கோ
    இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம்
    கொடுக்காத மகராசி இருக்கவே இருக்கிறாள் கொடுக்கிற மூதேவி கொடுப்பதற்கு என்ன என்றாளாம்
    மனம் காவலா மதி காவலா ?(பெண்ணுக்கு)
    மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம்
    ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும் வேண்டும் என்பார்கள்


    மகளே உன் சமத்து


    மகளுக்கு குடல் பாக்கியம் தவிர மற்ற பாக்கியம் எல்லாம் இருக்கின்றன
    மகளுக்கு புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்
    மகளே வல்லாண்மை
    மகள் செத்தாள் தாய் திக்கற்றாள்
    மகள் செத்தால் பிணம், மகன் செத்தால் சவம்
    மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்கினால் போதும்
    மகாரசன் பெண்சாதி மர்மக்காரி,, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி
    மகாலெட்சுமி பரதேசம் போனாற்போல
    மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி
    மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்
    மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள், கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
    மங்கை நல்லாள் பெண் பெருமாள், வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாள், திங்கள் ஒருபொழுது செவ்வாய் பகலறுதி
    மச்சத்தின் குஞ்சுவுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?
    மஞ்சள் குளித்து மணை மேலே இருக்கும்போது மட்டேன் என்றீரே, பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே
    மடிப் பிச்சை மாங்கலியப் பிச்சை
    போனதினம் போகப் புதனன்றைக்கு வந்தாள்
    அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் (50)
    அட்டிகைக்கு ஆசைப்பட்டு எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம்
    அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அயல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டது போல
    அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர் வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
    உதறுகாலி முண்டை உதறிப் போட்டாள்
    உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்
    ஏண்டி பெண்ணே, இளைத்தாய் குதிர் போல
    ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்
    ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்
    ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே
    ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன், இல்லாவிடால் பரதேசம் போவேன்
    மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்
    மயிற்கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவத்தை
    மரியாள் குடித்தனம் சரியாய் போச்சு


    மருமகள்-மாமியார் மோதல்


    மருமகளுக்கு மாமியார் பிசாசு; மாமியாருக்கு மருமகள் பிசாசு
    மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்
    மலைபோல பிராமணன் போகிறான், பின்குடுமிக்கு அழுதாளாம்
    மலை விழுங்கின மாணிக்கத்தாளுக்குக் கதவு சுண்டரங்கி
    மறு மங்கையர்க்கும், மறு மன்னவர்க்கும், மார்பும் முதுகும் கொடாமலிரு
    மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்
    மாதா செய்தது மக்களுக்கு (மக்களைக் காக்கும்) 70
    மாதா மனம் எரிய வாழான் ஒரு நாளும்
    மாதவுக்குச் சுகம் இருந்தால் கர்ப்பத்துக்கும் சுகம்
    மாமி மெச்சிய மருமகள் இல்லை
    மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது
    மாமியாருக்கு கண் மண்டை பிதுங்கிப் போகிறது
    மாமியாருக்கு சுவாமியார் இவள்
    மாமியாருக்கும் மாமியார் வேண்டும்
    மாமியாரும் ஒரு வீட்டு நாட்டுப் பெண்

    மாமியாரும் சாகாளோ, மனக்கவலை தீராதோ
    மாமியாரைக் கண்டு மருமகன் நாணுவதைப் போல
    மாமியாரோடு போகாத மாபாதகன்
    மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத மாமியார் குணவதி
    மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது
    மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
    மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கைத்தவிடு தேவலை
    மாமியார் செத்த ஆறாம் நாள் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
    மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
    மாமியார் செத்து மருமகள் அழுகிறது போல
    மாமியார் செய்த காரியங்களுக்கு நிந்தை கிடையாது
    மாமியார் தலையில கையும் வேலிப் புறத்துல கண்ணும் (90)
    மாமியார் தலையில கையும் மாப்பிள்ளை மேல் சிந்தையும்
    மாமியார் நன்மையும் வேம்பு இனிப்பும் இல்லை
    மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை
    மாமியார் வீடு மகா சவுக்கியம்
    மாம்பழத்தில் இருக்கும் வண்டே ! மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை


    மதனி/ மைத்துனி


    மாலை இட்ட பெண்சாதி காலனை (எமனை)ப் போல வந்தாள்
    மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது
    மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொண்ணாது (100)
    மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்
    மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன், இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.....

    Saturday, 14 December 2013

    கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!

    By: ram On: 11:11
  • Share The Gag




  • கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!


    உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.

    அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.

    அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

    அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.


    மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு

     மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

     தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

     தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!

    Wednesday, 11 December 2013

    தமிழின் சிறப்பை பாருங்கள்!

    By: ram On: 20:10
  • Share The Gag



  •  வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானைஎன்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!

    யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள் :

    இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு...

    ௧. கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
     ௨. போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
     ௩. துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
     ௪. களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
     ௫. கயமுனி - மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

     பொதுவான பெண் யானையின் பெயர்கள்

     ௧. பிடி
     ௨. அதவை
     ௩. வடவை
     ௪. கரிணி
     ௫. அத்தினி

     நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள் :

    ௧. கரிய நிறம் : யானை / ஏனை
     ௨. வெள்ளை நிறம் : வேழம்

     யானையின் மற்ற காரண பெயர்கள்

     ௧. உம்பல் - உயர்ந்தது
     ௨. கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
     ௩. பெருமா - பெரிய விலங்கு
     ௪. வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
     ௫. புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ள கையை உடையது
     ௬. ஓங்கல் - மலை போன்றது
     ௭. பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
     ௮. நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
     ௯. குஞ்சரம் / உவா - திரண்டது
     ௰. கள்வன் - கரியது
     ௰௧. புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
     ௰௨. கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
     ௰௩. வழுவை - உருண்டு திரண்டது
     ௰௪. யூதநாதன் - யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்
     ௰௫. மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
     ௰௬. கடகம் - யானைத்திரளின் /கூட்டத்தின் பெயர்

     யானையின் ஏனைய பெயர்கள்

     ௧. களிறு
     ௨. மாதங்கம்
     ௩. கைம்மா
     ௪. உம்பர்
     ௫. அஞ்சனாவதி
     ௬. அரசுவா
     ௭. அல்லியன்
     ௮. அறுபடை
     ௯. ஆம்பல்
     ௰. ஆனை
     ௰௧. இபம்
     ௰௨. இரதி
     ௰௩. குஞ்சரம்
     ௰௪. இருள்
     ௰௫. தும்பு
     ௰௬. வல்விலங்கு
     ௰௭. தூங்கல்
     ௰௮. தோல்
     ௰௯. எறும்பி
     ௨௰. ஒருத்தல்
     ௨௰௧. நாக
     ௨௰௨. கும்பி
     ௨௰௩. கரேணு
     ௨௰௪. கொம்பன்
     ௨௰௫. கயம்
     ௨௰௬. சிந்துரம்
     ௨௰௭. வயமா
     ௨௰௮. தந்தி
     ௨௰௯. மதாவளம்
     ௩௰. தந்தாவளம்
     ௩௰௧. மந்தமா
     ௩௰௨. மருண்மா
     ௩௰௩. மதகயம்
     ௩௰௪. போதகம்

    மகாகவி பாரதியார் - பிறந்தநாள் -11 டிசம்பர்!

    By: ram On: 17:36
  • Share The Gag



  •  காக்கைச் சிறகினிலே நந்தலாலா
     நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

     நல்லதோர் வீனை செய்து அதை
    நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

     நெருங்கின பொருள் கைபட வேண்டும்
     மனதில் உறுதி வேண்டும்

     வட்ட கரிய விழியில் கண்ணம்மா
     வானக் கருனைக் கொள்

     இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு. அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள். வைரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன. ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.

    அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம். 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார். அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன். சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர்.

    சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது. 7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார் எட்டயபுர மன்னர். அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது. பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு சென்று கல்வி பயின்ற பாரதிக்கு படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை. ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார்.

    நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார். அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார். அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது.

    பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி. அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி.

    தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி. அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார. நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார்.

    1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன. அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

    கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவனம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது.

    சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவனம் பாரதி பக்கம் திரும்பியது. பாரதியை கைது செய்ய முனைந்தனர். அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார்.

    அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார். பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது.

    1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேறினார் பாரதி. அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை. பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார். அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது.

    பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

    கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு. மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி. அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு.

    “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி. இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது.

    1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார் பாரதி.

    இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர், அதனைப் குறிப்பிடும்போது:

    இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

    தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார், பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார், அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான்.

    மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை. நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!

    Monday, 9 December 2013

    தமிழர்களின் வாழ்வியல் இலக்கணம்!

    By: ram On: 19:34
  • Share The Gag



  • தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர்என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன.மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.


    தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது..தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

    வீரம்:

    பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.


    காதல்:


    தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும்.இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள்.அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.



    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
     நன்கலம் நன்மக்கட் பேறு





     என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்.

    நட்பு:

    சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.




    முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
     அகநக நட்பது நட்பு



     உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.


    விருந்தோம்பல்:

    ‘விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.


    செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
     நல்விருந்து வானத் தவர்க்கு



    ” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,


    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
     மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று



    ” என்று கூறுவதிலிருந்துவிருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது.


    இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

    Saturday, 7 December 2013

    திருமணம் - கட்டுரை!

    By: ram On: 23:24
  • Share The Gag


  • திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்பத்தை உருவாக்கும் சடங்காகக் கருதப்படுகிறது. திருமணம் என்ற தமிழ்ச் சொல்லே மிக உயர்ந்த பொருளை உள்ளடக்கியது.


    திரு என்பது கண்டார் வியக்கும் தெய்வத் தன்மை என்ற பொருளைக் கொண்டது. இன்னார்க்கு இன்னார் என்பது தெய்வத்தின் செயலாகக் கருதப்படுகிறது.


    புலப்படாமல் அரும்பாக மறைந்திருந்த தெய்வத்தின் பங்கு மலர்ந்து இன்னார்க்கு இன்னார் என்று வெளிப்படையாகத் தெரிவிக்கும் போது அங்கே தெய்வீக மணம் கமழ்கிறது.


    சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை செவ்விதமாக, ஓர் ஒழுங்கு முறையோடு, அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள். 'சடங்குகள்' வாழ்வியல் முறைக்கு அரண் அமைத்து பாதுகாப்பு அளிக்கிறது.


    வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர சடங்குகளை யாத்தனர் தமிழ்ச் சான்றோர். திருமணத்தின் போது கடைபிடிக்கப்படுகின்ற சில சடங்குகள் பற்றியும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.


    தாரை வார்த்தல்:


    பழங் காலத்தில் ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுக்கும் போது, மீண்டும் மனம் மாறி பிற்காலத்தில் அந்தப் பொருள் என்னுடையது என்று உரிமை கோரக் கூடாது என்பதற்காக தாரை வார்த்துக் கொடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு ஆவணத்தில் எழுதிக் கொடுப்பதற்கு சமமாகக் கருதப்படுகிறது.


    அக்காலத்தில் ஆவணங்கள் புழக்கத்தில் இல்லாததாலும் அவ்ஆவணங்களை பதிவு செய்வதற்கு ஏற்ற வசதிகள் காணப்படாததாலும் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறந்த முறையாகக் கருதப்பட்டது.


    மீனாட்சி திருமணத்தில் மீனாட்சியம்மையை சோம சுந்தரரின் கரங்களில் திருமால் தாரை வார்ப்பது போன்ற காட்சியை கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் நாம் காணுகிறோம். இது போன்ற காட்சியை திருமண அழைப்பிதழில் முன்னட்டையில் அச்சிடுவதையும் அவதானிக்க முடியும்.


    தாலி கட்டுதல் :


    தமிழர் திருமணத்தில் தாலிக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தாலி கட்டுவது என்பது திராவிட மக்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் மரபாகும். சமுதாயம் வாழத்தக்கதாக இல்லாமல் தறிகெட்டுப் போய் விடும் என்று எண்ணி அதனை நெறிப்படுத்துவதற்காக தாலி கட்டும் சடங்கு உட்பட திருமணச் சடங்குகள் தோற்றுவிக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.


    'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப'

    ஐயர் என்று மேலே தொல்காப்பிய நூற் பாவில் குறிப்பிட்டது தலைமைப் பொறுப்பில் உள்ள சான்றோரை ஆகும். கரணம் என்பது சடங்கு எனப் பொருள்படும்.


    'தாலி' என்ற சொல்லுக்கு 'தாலம்' என்பது வேர்ச் சொல் ஆகும். தாலம் என்பது பனை அல்லது அதன் வழியான பனை ஓலையைக் குறிக்கும்.


    இந்தப் பெண்ணை நான் மணந்து கொண்டேன். இவளை என்றும் பிரியாமல் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையாகக் கொண்டு காப்பாற்றுவேன் என்று பனை ஓலையில் எழுதச் செய்து அதனை ஓர் உலோகக் குவளையில் இட்டு அதை மஞ்சள் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு அதனை பெண்ணின் கழுத்தில் ஆண் கட்டும்படி வைத்தார்கள் தமிழ்ச் சான்றோர்கள்.


    தாலத்தினால் ஆன உறுதி மொழியைக் கட்டிய கயிறானதால் அதற்கு தாலி என்ற காரணப் பெயர் அமைந்தது.


    மெட்டி அணிவித்தல் :


    திருமணச் சடங்கின் போது மணப் பெண்ணின் வலது காலை முதலிலும், இடது காலை இரண்டாவதாகவும் அம்மி மேல் மணமகன் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்க வேண்டும்.


    வழிப்பயணத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனும் தலைவியும் பாலை நிலத்தின் வழியாக கடந்து சென்றார்கள். அவர்களைப் போல இன்னொரு இணை எதிரே வந்து இவர்களைக் கடந்து சென்றது. சிறிது நேரத்தில் அந்த இணையின் செவிலித் தாய் இவர்களைப் பார்த்து, 'உங்களைப் போலவே ஒரு இணை இவ்வழியாகச் சென்றதைக் கண்டீர்களா?' எனக் கேட்டாள். அதற்கு தலைவன், 'இவ்வழியாக ஓர் ஆடவன் சென்றதைக் கண்டேன். உடன் வந்தவரை நான் பார்க்கவில்லை. இவளைக் கேளுங்கள்' என்று தலைவியைக் காட்டினான் என்று திருக்கோவையார் நூல் உரைக்கிறது.


    ஓர் ஆடவன் வேற்றுப் பெண்ணைப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தாலும் முகத்தை நேராகப் பார்க்காமல் அவளுடைய கால்களைப் பார்ப்பது தமிழர் வழக்கு.


    அவ்வாறு ஒரு பெண்ணின் கால்களைப் பார்க்கும் போது அதில் மெட்டி இருக்குமானால் அவள் மாற்றான் மனைவி என அறிந்து அவளை தன்னுடைய உடன் பிறந்த சகோதரியாக மனதில் கொள்ள வேண்டும் என்பது மரபு. எனவேதான் பெண்ணின் காலில் மெட்டி அணிவித்தனர் பெரியோர்கள்.


    அம்மி மிதித்தல் :



    உலோகங்கள் எல்லாவற்றையும் வளைக்க முடியும். ஆனால் கருங்கல்லை வளைக்க முடியாது. உடைக்கத்தான் முடியும்.


    அது போல் கற்பு என்ற பண்பில் நான் வளைந்து கொடுக்க மாட்டேன். அதற்கு ஏதேனும் ஆபத்து வருமாயின் கல் பிளந்து போவது போல என் உயிர்போகும் என்பதைக் காட்டவே அம்மியாகிய கல்லின் மேல் பெண்ணை கால் வைத்து மிதிக்கச் செய்தனர்.


    கல்லின் பண்பு கல் + பு எனக் குறிக்கப்பட்டு புணர்ச்சியால் கற்பு ஆயிற்று.


    'கல்லினும் வலிதென் கற்பெனக் காட்டி மெல்லியலாளே மேன்மை அடைக'



    அருந்ததி காட்டல் :


    அருந்ததி என்பவள் வசிட்டரின் மனைவி. கற்பின் மிக்கவளான அருந்ததி தெய்வத் தன்மையால் நட்சத்திரமாகி விட்டாள் என்று கூறுவர்.


    எனவே அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் நீயும் கற்பில் சிறந்தவளாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதற்காக அருந்ததி காட்டல் நிகழ்த்தப்படுகிறது.


    இவ்வாறு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றிற்குள்ளும் புதைந்திருக்கும் அர்த்தங்கள் நூறு. இல்லறத்தின் நோக்கத்தை இரு வரியில் ஒரு காவியமாக திருவள்ளுவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


    'அன்பும் அறனும் உடைத்தாயின்
    இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'


    தமிழ் ஆன்றோர் வாக்கிற்கு அமைய எமது மரபுகள் தொடரட்டும் மண்ணின் மணம் வீசட்டும்.

    குழந்தை விரல் சூப்புவது ஏன்?

    By: ram On: 17:43
  • Share The Gag
  • மன்னன் யுவனாச்வன் எடுத்திருக்கும் முடிவை அறிந்த மந்திரிகள் திகைத்தார்கள். அவர்களுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடிக் கூடி விவாதித்தார்கள். இஷ்வாகு மன்னனான யுவனாச்வனுக்கு வாரிசு இல்லை என்று நாடே கவலைப்படுகிறது. அரசியும் அளவற்ற வேதனையில் ஆழ்ந்திருக்கிறாள். இதனிடையில் மன்னன் கானகம் சென்று தவமியற்ற முடிவெடுத்து விட்டானே? மன்னன் முடிவை எப்படி மாற்றுவது? ‘‘மன்னா! இன்னும் சிறிதுகாலம் பொறுங்கள். நாங்கள் சில முனிவர்களை அணுகி வருகிறோம். தங்கள் ஜாதகத்தைக் காட்டி, யாகத்தாலோ மந்திரங்களாலோ தங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்ட வழியுண்டா என்று விசாரித்து வருகிறோம்.


    அதற்குள் கானகம் சென்று தவமியற்ற அவசரப்பட வேண்டாம்!’’ வயதில் மூத்த தலைமை மந்திரி யுவனாச்வனிடம் வேண்டினார். ஆனால், மன்னன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். எத்தனை காலம் இப்படி வேதனையைச் சுமந்து வாழ்வது? மந்திரிகளிடம் அவர்கள் சிறந்த புத்திசாலிகள் என்றும் மன்னன் இல்லாவிட்டாலும் அவர்களே நாட்டைச் சிறப்பாக நிர்வகித்து ஆளமுடியும் என்றும் சொல்லிவிட்டான். நிலைமை இவ்வளவு நெருக்கடியாக, இத்தனை சீக்கிரம் உருவாகும் என்று மந்திரிகள் எண்ணியிருக்கவில்லை. மன்னன் இல்லாவிட்டால் பகை நாட்டினர் தைரியமாகப் போரிடத் துணிவார்களே! தாங்கள் நாட்டை ஆள்வதாவது?


    நாட்டுக்கு ஆசைப்பட்டு மந்திரிகள் மன்னனைக் காட்டுக்குத் துரத்திவிட்டார்கள் என்றல்லவோ மக்கள் பேசுவார்கள்? நமக்கெதற்கு அந்தப் பழி? மேலும் இந்த மன்னனுக்குப் புத்திரனில்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு என்ன குறை இருக்கிறது? இவனைப் போன்ற சிறந்த மனிதனை எங்கு தேடினாலும் காணக் கிடைக்காது. மந்திரிகள் ஒரு முடிவு செய்தார்கள். காட்டில் கடும் தவம் இயற்றிவரும் பார்க்கவ முனிவரை அணுகுவதென்றும் இந்தப் பிரச்னைக்கு அவர் காட்டும் வழியைப் பின்பற்றுவதென்றும் தீர்மானித்தார்கள். அன்றே அவசரமாகக் கானகத்திற்குப் புறப்பட்டார்கள். தவம் செய்ய முடிவு செய்திருக்கும் மன்னன் தங்கள் முயற்சியைத் தடுத்துவிடக் கூடும் என்றெண்ணி மந்திரிகள் மன்னனிடம் தாங்கள் பார்க்கவ முனிவரைப் பார்க்கப் போவதைத் தெரிவிக்கவில்லை.


    அப்படித் தெரிவிக்காதது எத்தனை பெரிய சிக்கலை உருவாக்கப் போகிறது என்பதையும் அவர்கள் அப்போது அறியவில்லை. ஏற்கெனவே அரசிக்கு மன்னன் கானகம் செல்ல முடிவெடுத்திருப்பது உள்பட அனைத்தும் தெரியும். தன் விதியை நொந்துகொண்டு அவள் அன்றிரவு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் எழுந்த மன்னன் சாளரத்தின் வழியே நிலவொளியில் தெரிந்த மனைவியின் முகத்தைச் சற்றுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் முகத்தில் படர்ந்திருந்த கூந்தலை மெல்லக் காதோரமாக ஒதுக்கிவிட்டான். போர்வையை எடுத்துப் பரிவோடு போர்த்தி விட்டான். உத்தமமான மனைவி.


    அழகில் மட்டுமல்ல, பண்பிலும் சிறந்தவள். தன்னால் இவளுக்குப் புத்திர பாக்கியம் தர இயலவில்லையே! தன்னையே குழந்தைபோல் எண்ணித் தன்மேல் தாளாத பாசம் செலுத்துபவள். தன்னைப் பிரிய நிச்சயம் உடன்பட மாட்டாள். இவளிடம் சொல்லாமலே தான் கானகம் செல்ல வேண்டும். பூனைபோல் மெல்லப் பதுங்கி எழுந்த மன்னன், அரண்மனையை விட்டு வெளியேறி யாருமறியாமல் நாட்டை அடுத்திருந்த ஒரு கானகத்தை நோக்கி நடந்தான்.


    அவன் தவம் செய்ய எண்ணிச் சென்ற கானகமும் பார்க்கவ முனிவரைத் தேடி மந்திரிகள் சென்ற கானகமும் ஒன்று என்பதை இரு தரப்பினரும் அறியவில்லை. அதனால் ஒரு விபரீதம் நேரப் போவதையும் அவர்கள் யாரும் அப்போது உணரவில்லை. மன்னன் தவம் செய்ய இடம்தேடிக் கானகத்தில் ஒருபுறம் அலைந்து கொண்டிருந்த வேளையில், மந்திரிகள் அதே கானகத்தில் இன்னொரு புறம் இருந்த பார்க்கவ முனிவரின் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார்கள். முனிவர் அவர்கள் சொல்வதனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.


    ஒரு மன்னன் மேல் இத்தனை மந்திரிகள் இப்படியொரு பாசம் செலுத்துகிறார்கள் என்றால் அவன் மிக உயர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார். மாபெரும் தவசீலரான அவர் அந்த மன்னனின் பிரச்னையைத் தீர்க்கத் திருவுளம் கொண்டார். அந்தக் கானகத்தில் நீர்நிலைகள் அபூர்வம் என்றும் வடக்குப் பக்கமாக உள்ள ஒரே ஒரு குளம்தான் குடிக்கும் வகையில் தண்ணீர் தரக் கூடியது என்றும் சொல்லி, அங்குபோய் இறைவனைப் பிரார்த்தித்து, ஒரு சிறு செம்பில் தண்ணீர் எடுத்து வருமாறு மந்திரிகளைப் பணித்தார். மந்திரிகள் மிகுந்த நம்பிக்கையோடு செம்பில் நீர் கொணர்ந்தார்கள். நீர்ச்செம்பைக் கையில் வாங்கிக் கொண்ட பார்க்கவர் இறைவனைத் தியானம் செய்தார்.


    பின் மந்திரிகளிடம் சொல்லலானார்: ‘‘அன்பர்களே! நான் இந் தக்கலச நீருக்கு வலிமையேற்றும் வகையில் முழு மன ஒருமைப்பாட்டோடு, புத்திர பாக்கியத்தைத் தரும் மந்திரத்தை ஜபம் செய்யப் போகிறேன். ஒரு லட்சத்து எட்டு முறை அந்த மந்திரம் ஜபிக்கப்பட வேண்டும். என் ஒருமைப்பாடு சிதறும் வகையில் நீங்கள் யாரும் எந்த சப்தமும் செய்யக் கூடாது. எந்தப் பேச்சும் பேசாமல் அமைதியாக இருங்கள். என் ஜப எண்ணிக்கை முடியும்வரை நான் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். என் ஜபம் முடியும்வரை நீங்களும் இறைவனை மனத்தில் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.’’


    மந்திரிகளில் ஒருவர் தயக்கத்தோடு கேட்டார்: ‘‘சுவாமி! அப்படி நீங்கள் ஜபித்த தண்ணீரை எங்கள் அரசி குடித்தால் அவள் கர்ப்பமடைவது உறுதி தானே?’’ பார்க்கவ முனிவர் நகைத்தார். ‘‘நான் ஜபித்த தண்ணீரை ஒரு விலங்கு அருந்துமானால் அது கர்ப்பமடைந்து ஒரு மனிதக் குழந்தையைப் பிரசவிக்கும். ஏன் ஒரு பாறையில் இந்தத் தண்ணீரைக் கொட்டினால் பாறை கர்ப்பமடையும்; பத்து மாதங்களில் பாறையைப் பிளந்துகொண்டு ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்!


    அவ்வளவு அபூர்வமான மந்திரத்தை ஜபிக்கப் போகிறேன். உங்கள் நாட்டுக்கு ஒரு வாரிசு தோன்றப் போவது உறுதி.’’மலர்ச்சியோடு சொன்ன முனிவர், விழிகளை மூடி ஜபம் செய்யலானார். மந்திர உரு ஏற ஏற செம்பில் இருந்த நீரின் வலிமையும் ஏறிக் கொண்டே இருந்தது. ஆனால், லட்சத்து எட்டு முறை ஜபிப்பதற்கு எத்தனை நேரம் ஆகும் என்று மந்திரிகளால் ஊகிக்க இயலவில்லை. நேரம் கடந்துகொண்டே இருந்தது. முனிவரோ கண்ணைத் திறக்கவில்லை. ஜபத்தை நிறுத்தவும் இல்லை. அவர் தம் ஆழ்மனத்தில் லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை முடியும் வரை ஜபிப்பது என்று சங்கல்பம் செய்திருந்தார். லட்சத்து எட்டு என்ற எண்ணிக்கை வந்ததும் தம் ஆழ்மனமே தமக்கு அறிவுறுத்தும் என அவர் அறிவார். மந்திரிகளின் கண்களைத் தூக்கம் தழுவியது. சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் ஆசிரமத்தின் உள்ளே இருள் படர்ந்தது. மந்திரிகள் ஒவ்வொருவராகத் தாங்கள் இருந்த இடத்திலேயே அப்படியே படுத்து உறங்கலானார்கள்.


    மறுநாள் சூரியோதயம் ஆகும் தருணம். இருள் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை. முனிவர் தன் ஜபம் முடித்து கண் திறந்தார். கலசத்தில் இருந்த புனித நீரை நிறைவோடு பார்த்தார். இனி அது தன் வேலையைச் செய்யும் என்பதை அவர் அறிவார். கலசத்தைச் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக வைத்து, கலசத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மெல்ல எழுந்தார். மந்திரிகள் அனைவரும் களைப்பில் உறங்குவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார். குழந்தை மனம் படைத்த நல்லவர்கள் இவர்கள். அந்த மன்ன னுக்கு இத்தகைய மந்திரிகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். காலைக் கடன் முடித்து குளித்து நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்வதன் பொருட்டு ஆசிரம வாயில் கதவைத் திறந்துகொண்டு கமண்டலத்தோடு நீர்நிலை நோக்கி நடந்தார்.


    மன்னன் யுவனாச்வன், தவமியற்றத் தகுந்த இடம் தேடி அன்று முழுவதும் கானகமெங்கும் திரிந்தான். அடர்த்தி மிகுந்த அந்தக் கானகத்தில் அத்தகைய இடம் வாய்ப்பது அபூர்வமாக இருந்தது. நடந்து நடந்து அவன் கால்கள் கெஞ்சின. தாகத்தால் உயிரே போய்விடும்போல் இருந்தது. மழைநீரால் வளம் பெற்று மரங்கள் அடர்ந்துள்ள இந்தக் கானகத்தில் குடிக்கத் தண்ணீர் தரும் நீர்நிலையையே காணோமே? ஒரு பகல் முழுதும் சுற்றி இரவும் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.


    ஆனால், ஒரு குளத்தையோ குட்டையையோ கண்டுபிடிக்க முடியவில்லையே? மன்னன் கால்வலியோடும், தாகத்தோடும், சலிப்போடு நடந்துவந்தபோதுதான் அதிகாலைக் கருக்கலின் மெல்லிய இருளில் அந்த ஆசிரமம் அவன் கண்ணில் பட்டது. வாயில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். பசியாலும் தாகத்தாலும் அவன் விழிகள் மங்கியிருந்தன. ஆசிரமத்தினுள் யார் யாரோ படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யார் என இருள் காரணமாக அவனால் அடையாளம் காண இயலவில்லை. ஓர் ஓரத்தில் ஒரு செம்பில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. தாகம் பொறுக்காத மன்னன் அந்தச் செம்பு நீரை எடுத்துக் கடகடவெனக் குடித்தான். பின் அப்படியே கீழே சாய்ந்து அவனும் உறக்கத்தில் ஆழ்ந்தான். வெளியே சென்ற பார்க்கவ முனிவர் திரும்புவதற்குள் சூரியன் நன்கு உதயமாகி விட்டான். ஆசிரமத்தின் உள்ளே வந்தவர் அனைவரும் இன்னும் உறங்குவதைப் பார்த்து நகைத்துக் கொண்டார்.


    மிகுந்த நம்பிக்கையோடு செம்பைப் பார்த்தார். இதென்ன, செம்பில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடக் காணோமே? நாம் செய்த மந்திர ஜபம் எல்லாம் வீணாகி விட்டதே? அவர் மனம் திடுக்கிட்டுப் பதறியது. கூச்சலிட்டு அனைவரையும் எழுப்பினார். மன்னன் எழுந்து தன் மந்திரிகளெல்லாம் அங்கிருப்பதைப் பார்த்துத் திகைத்தான். பின் விசாரித்து விஷயங்களை அறிந்துகொண்டான். ‘‘நான் மந்திர ஜபம் செய்த இந்தச் செம்பு நீர் எங்கே போயிற்று?’’ என வினவினார் முனிவர். ‘‘கடும் தாகம் காரணமாக நான்தான் தெரியாமல் அருந்தி விட்டேன்! என்னை மன்னிக்க வேண்டும்!’’ என முனிவரைப் பணிந்தான் மன்னன். ‘‘மன்னனே! நீ தெரியாமல் செய்த செயலாலும் நன்மையே உண்டாயிற்று. உன் மனைவி கர்ப்பமடைவதற்கு பதிலாக இந்த நீரை அருந்திய நீ கர்ப்ப மடைவாய். இன்னும் பத்து மாதத்தில் உன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உன் வாரிசு பிறக்கும். இது உறுதி!’’


    இதைக் கேட்டு மந்திரிகள் பதறினார்கள். ‘‘சுவாமி! வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாரிசு பிறந்தால் எங்கள் மன்னர் இறப்பாரே? எங்களுக்கு மன்னரும் வேண்டுமே? வாரிசு வளர்ந்து வாலிபனாகும்வரை நாட்டை யார் ஆள்வது?’’ மன்னன் மேல் மந்திரிகள் செலுத்திய பேரன்பைப் பார்த்து முனிவர் நெகிழ்ந்தார். ‘‘கவலைவேண்டாம். இந்த மந்திர ஜபத்தின்போதே சுகப்பிரசவம் நடக்கவேண்டும் என்ற உப மந்திரத்தையும் சேர்த்துத்தான் ஜபித்திருக்கிறேன். எனவே சுகப் பிரசவம்தான் நடக்கும். மன்னன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு குழந்தை பிறந்தாலும் உடனே வயிறு கூடிக் கொள்ளும். விரைவில் புண் ஆறி மன்னன் சரியாகி விடுவான்!’’


    முனிவரின் பதிலால் நிறைவடைந்த மந்திரிகளும் மன்னனும் அவரை நமஸ்கரித்து விடைபெற்று அரண்மனை சென்றார்கள். ராணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், குழந்தை பிறந்தால் அது தாய்ப்பாலுக்கு என்ன செய்யும் என்பதை மட்டும் யாரும் எண்ணிப் பார்க்கவில்லை! பத்து மாதம் கழித்துக் குழந்தை பிறந்தது. மன்னனும் அரசியும் மந்திரிகளும் மக்களும் மனம் மகிழ்ந்தார்கள். ஓர் ஆண், பிள்ளை பெற்ற அதிசயத்தைப் பார்க்க வானில் தேவர்கள் குழுமினார்கள். இந்திரன் மற்ற தேவர்களிடம் சொன்னான்: ‘‘உலகில் எல்லோரும் பெண் பெற்ற பிள்ளைகள் என்ற வகையில் பெண் பிள்ளைகள் தான். இதோ இவன் ஒருவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!’’


    மற்ற தேவர்கள் கலகலவென நகைத்தார்கள். இப்போது குழந்தை அழத்தொடங்கியது. தாய்ப்பாலுக்கு என்ன செய்வது? ‘‘தேவேந்திரா! இந்தப் பிரச்னையைத் தாங்கள் எவ்விதமாவது தீர்த்து வைக்கலாகாதா?’’ குழந்தை மேல் கொண்ட பாசத்தோடு மற்ற தேவர்கள் வேண்டினார்கள். ‘‘இந்தக் குழந்தை உயிர்வாழ எதைக் குடிக்கும்?’’ என்று கேட்டார்கள். ‘‘குழந்தையின் விரலை அதுவே தன் வாயில் வைத்துக் கொண்டு அதைக் குடிக்கும். குழந்தை உயிர்வாழத் தேவையான சக்தியை அதன் விரலே அதற்குக் கொடுக்கும். இந்த அபூர்வக் குழந்தையின் ஞாபகமாக இனி உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுமே பசி தோன்றும்போது, தன் விரலைத் தானே தன் வாயில் வைத்து உறிஞ்சி சமாதானம் அடையும்!’’ என வாழ்த்தினான் இந்திரன். அந்தக் குழந்தை இந்திரன் ஆசீர்வாதத்தோடு மாந்தாதா என்ற பெயர்பெற்று வளர்ந்தது. வாலிப வயதடைந்து அவன் அரசனானான். அதன்பின் மன்னன் யுவனாச்வன் தன் நெடுநாள் ஆசைப்படிக் கானகம் சென்று தவம் நிகழ்த்தி முக்தி அடைந்தான்.


    (மகாபாரதம் ஆரண்ய பர்வம் பகுதியில் இடம்பெற்றுள்ள இக்கதை, சின்னஞ்சிறு குழந்தைகள் ஏன் விரலை உறிஞ்சுகிறார்கள் என்பதற்கான காரண த்தை சுவாரஸ்யமாக இவ்விதம் விளக்குகிறது.)

    Friday, 6 December 2013

    பாண்டவர்கள் வெட்டிய குளம்!

    By: ram On: 23:19
  • Share The Gag


  • ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள “கோலியாக்’ என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.


    ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.


    கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.


    அந்தக் கோயில் அந்த மேடு “நிஷ்களங்க மகாதேவர்’ எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.


    கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.


    அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.


    ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.


    நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.


    பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.


    கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், “நிஷ்களங்க மகாதேவர்’ என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

    Tuesday, 3 December 2013

    ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள் தமிழகத்தில் உண்டு! தெரிந்து கொள்வோம்!.

    By: ram On: 15:40
  • Share The Gag

  • 1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்


    2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி


    3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்


    4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்


    5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்


    6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)


    7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)


    8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்


    9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை


    10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை


    11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)


    12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்


    13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்


    14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)


    15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)


    16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]


    17. இரண்டாவது மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )


    18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)


    19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)


    20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)


    21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்


    22. கோயில் நகரம் – மதுரை


    23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)


    24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்


    25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

    Monday, 2 December 2013

    அழகு என்ற வார்த்தைக்குதான் எத்தனை வார்த்தைகள் தமிழில்!

    By: ram On: 23:30
  • Share The Gag
  •  


    –அழகு   – அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம்,  அம்மை, அலரி,


    - இராமம், இல்லிதம், இலாவண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு,


    - கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம்,


    - சந்தம், சவி, சாயல், சித்திரம்,சீர், சுந்தரம், செவ்வி, செம்மை, சேடு,


    - சொக்கு, சோபம், செளமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம்,


    - தையல், தோட்டி, தோல், நலம், நல்லி, நன்கு, நோக்கம், நோக்கு,


    - பதம், பத்திரம், பந்தம், பந்துரம்,  பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு,


    - மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகரம், மனோக்கியம், மாண்பு,


    - மாதர், மாமை மாழை, முருகு, யாணர், யெவளனம், வகுப்பு, வடிவு,


    - வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றியும்


    - பேரழகின் பெயர அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம்


    - ஆரியம்