Thursday 2 October 2014

Tagged Under: ,

காந்திய வழியில் தமிழ் சினிமா

By: ram On: 19:16
  • Share The Gag
  • இன்று இந்தியா ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும், எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அந்த அளவிற்கு நமக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. இந்த சுதந்திர காற்றை நாம் சுவாசிக்க பலர் இரத்தம் சிந்தினர். அவர்கள் பட்ட கஷ்டங்கள் தான் நாம் இன்று சந்தோஷமாக என்னுடைய நாடு இந்தியா என்று காலரை தூக்கிவிடுகிறோம்.

    ஆனால் அப்படி இரத்தம் சிந்திய பலரும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று தான் இருந்தவர்கள். இவர்களை ஒன்றிணைத்து ஒரு தலைவனாக இல்லாமல் மக்களோடு மக்களாக இறங்கி போராடியவர் தான் மகாத்மா காந்தியடிகள் அவர்கள்.

    எதற்கு எடுத்தாலும் அடிதடி, வெட்டுகுத்து என்று இருந்த மக்களிடம் அன்பு என்ற ஒரு வழியை காட்டி அஹிம்சை முறையில் அனைவரையும் போராட வைத்தார் காந்தி. உலகிலேயே அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

    எந்தவொரு முடிவுக்கும் அன்பு மட்டுமே தீர்வு என்று இவர் கூறியதை தான் கலைஞானி கமல்ஹாசன் ஹேராம் படத்தில் ஒரு பாடல் வரியாகவே வைத்திருப்பார். ‘அன்பென்னும் ஒரு சொல்லை இன்று நீ ஏற்றி வைத்தால், நாளை எரியும் உன் பெயர் சொல்லும் ஜோதி’ என்று அன்பின் வலிமையை பாட்டாவே பாடியிருப்பார்.

    மேலும் இப்படத்தில் காந்தியின் கொள்கையை முழுவதும் தெரியாமல் அவரை கொல்ல வரும் இளைஞனாக வந்த கமல், இறுதியில் காந்தியின் வழியை புரிந்து கொண்டு அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பார்.

    இது மட்டுமின்றி காந்தியாக யாராலும் இருக்க முடியாது, ஆனால் காந்தியாக நடித்தால் கூட மாலைகளும், மரியாதைகளும் நம்மை தேடி வரும் என்பதற்கு சான்றாக காந்தி படத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லி அவர்களுக்கு ஆஸ்கர் விருது தேடி வந்தது.

    மேலும் துப்பாக்கி, வன்முறை என்று தன் அனைத்து படத்திலும் இரத்தம் சொட்ட சொட்ட சண்டை போடும் விஜய்காந்த் கூட காந்தியடிகளின் கொள்கை மீது கொண்ட நம்பிக்கையால் ‘இந்தியாவின் அணு ஆயுதம் வாங்கிய காசில், அரிசி வாங்கியிருந்தால் பல ஏழைகளில் வயிற்று பசியை போக்கியிருக்கலாம்’ என்று அவரும் அன்பில் வலியை உணர்ந்துள்ளார்.

    அதே போல் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் அவர்கள் கூட, ஞானப்பழம் என்ற படத்தில் காந்திய கொள்கையை விடாமல் பிடித்து, கடைசி வரை அஹிம்சையுடன் போராடி, தப்பு செய்தது தன் சொந்த தந்தையாக இருந்தாலும் மன்னிக்க கூடாது என்று அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்து தேசத்தந்தை வழியில் நின்றவர்.

    இதை தொடர்ந்து ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் காந்தியின் பெருமையை பற்றி கூறுகிறேன் என்று சொல்லி அதே படத்தில் வரும் விவேக்கை போல் நம்மையும் கதற, கதற தியேட்டரில் இருந்து ஓடவிட்ட படங்களும் உண்டு.

    மகாத்மா இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் அஹிம்சை வாதிகளுக்கு ரோல் மாடலாக திகழ்பவர். உலக தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலாவிற்கு முன்பே நிறவெறியை எதிர்த்து தென் ஆப்ரிக்காவில் போராடியவர் காந்தியடிகள்.

    இப்படி இந்தியா என் நாடு என்று குறுகிய வட்டத்தில் இல்லாமல் உலகம் முழுவதும் அன்பு என்று சொல் பரந்து விரிய வேண்டும் என்று நினைத்த மகாத்மாவின் பிறந்தாநாளான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். அதே சமயத்தில் உலகில் வன்முறை நீங்கி எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுவோம் என்று இன்நாளில் உறுதி மொழி எடுப்போம்.

    0 comments:

    Post a Comment