Friday 22 November 2013

இரண்டாம் உலகம் - காதல் உலகம் விமர்சனம்..!

By: ram On: 23:53
  • Share The Gag


  • நடிகர் : ஆர்யா

    நடிகை : அனுஷ்கா

    இயக்குனர் : செல்வராகவன்

    இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்

    ஓளிப்பதிவு : ராம்ஜி


    காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அதில் காதலை தழைக்க வைப்பதுதான் இரண்டாம் உலகம்.

    தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஆர்யா. தாய் இல்லாத அவர் உடல் நிலை சரியில்லாத தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். எந்த ஒரு வேலையும் செய்யமுடியாத தந்தையை மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுடன் ஆறுதலாக பழகிவருகிறார். இதே மருத்துவமனையில் டாக்டராக பணி புரியும் அனுஷ்கா இவரின் நல்ல செயல்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார். தன் காதலை ஆர்யாவிடம் சொல்ல முடிவெடுக்கிறார். அதன்படி நண்பர்கள் துணையோடு ஆர்யாவிடம் காதலை சொல்கிறார்.

    இந்த காதலை ஏற்க ஆர்யா மறுத்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த அனுஷ்கா, தன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். முதலில் அனுஷ்காவின் காதலை ஏற்க மறுத்த ஆர்யா, பின்னர் அடிக்கடி அவரை பார்த்தபோது, அவர் மீது காதல் வயப்படுகிறார். தன் காதலை அனுஷ்காவிடம் சொல்ல அவரையே சுற்றி வருகிறார்.

    ஒரு கட்டத்தில் அனுஷ்காவின் திருமணம் நடைபெறாமல் நின்றுவிடுகிறது. இதனால் ஆர்யாவின் காதலை ஏற்றுக்கொள்கிறார் அவர். இருவரும் சந்தோஷமாக காதல் வாழ்க்கையை தொடங்கும் போது, அனுஷ்கா இறந்து விடுகிறார். இவை அனைத்தும் இயல்பாக நம் வாழும் உலகத்தில் நடக்கிறது.

    இதேபோன்று இரண்டாம் உலகம் என்று ஒரு கிராபிக்ஸ் உலகத்தை வடிவமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த உலகத்தில் காதல் என்ற ஒன்று கிடையாது. அதில் வாழும் மக்கள் அனைவரும் பெண்களை மதிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆணுக்கு பெண் அடிமை என்றும் அவர்களுக்கு எந்தவித மரியாதை தராமலும் வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நவீன உலகத்தில் ஒரு பெண்ணை தெய்வமாக வழிப்படுகிறார்கள். அவருக்கு மட்டும்தான் இந்த உலகத்தில் மரியாதை. இங்கு அரசர் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஆணுக்கு பெண் அடிமை இல்லை என்று சுய கவுரவத்தோடு வாழும் பெண்ணாக அனுஷ்கா. துடிப்பான இளைஞரான ஆர்யா அங்கு அனுஷ்கா மீது காதல் கொள்கிறார். இதை ஏற்க மறுக்கிறார் அனுஷ்கா. இவர்களுக்குள் காதல் புரிய வைக்க, காதல் மலர, இயல்பான உலகத்தில் இருந்து அனுஷ்காவை பிரிந்து வாழும் ஆர்யாவை இரண்டாம் உலகத்திற்கு கொண்டு வருகிறார் பெண் கடவுள்.

    நிஜ உலகத்தில் இருந்து இங்கு வரும் ஆர்யா, இரண்டாம் உலகத்தில் காதலே என்ன என்று அறியாத அனுஷ்காவிற்கு காதலை உணரவைத்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இரண்டாம் உலகத்தில் முதல் காதல் மலர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

    இரண்டு கதாபாத்திமாக நடித்திருக்கும் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் முழுக்க இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் வந்திருந்தாலும் ரசிக்கும் படியாக செய்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இருவரும் மிரள வைக்கிறார்கள். ஆர்யாவின் உடல் அமைப்பு கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

    இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு இல்லை.

    காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அந்த உலகம் காதல் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லி, பின்பு அதில் காதலை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். எங்கெல்லாம் காதல் இல்லாமல் இருக்கிறதோ அந்த உலகத்திற்கு எல்லாம் ஆர்யாவை அனுப்பி காதலை மலர வைப்பது என்று முடிவெடுத்திருப்பதுடன் படம் முடிகிறது.

    மொத்தத்தில் இரண்டாம் உலகம் காதல் உலகம்.

    வெங்கட்பிரபு இயக்கத்தில் மீண்டும் அஜீத்!

    By: ram On: 22:58
  • Share The Gag
  •  

    அஜீத் நடிப்பில் ‘பில்லா’ படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுக்காத நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மங்காத்தா’ படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.

    இந்த படத்தில் முதன்முறையாக தன்னுடைய உண்மையான தோற்றத்தில் நரைத்த முடி, தாடியுடன் நடித்திருந்தார். இந்த தோற்றம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ ஆகிய படங்களிலும் நரைத்த முடியுடனும், தாடியுடனும் நடித்துள்ளார்.

    தன்னுடைய கெட்டப்புக்கு புதுவடிவம் கொடுத்த வெங்கட்பிரபு-வுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் அஜீத் நடிக்கப் போகிறாராம். ‘பிரியாணி’ படத்திற்கு பிறகு சிறுபட்ஜெட்டில் வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் அஜீத் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

    ஏற்கெனவே அஜீத், ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மனதின் அடிஆழத்தில் ஈரம்!

    By: ram On: 22:48
  • Share The Gag
  • கடும் மழை. ஒருவர் மருத்துவமனை செல்ல வேண்டும். எல்லா ஆட்டோவும் நிற்காமல்செல்கின்றன. ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் இதுதான் தருணம் என்று முப்பது ரூபாய் தூரத்துக்கு 200 ரூ கேட்கிறார்.

    வேறு வழியின்றி அந்த மனிதர் ஆட்டோவில் ஏறி வேறு ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு பாட்டியைக் கைத்தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை செல்கிறார்.

     Receptionist பாட்டியின் பெயரைக் கேட்க' இவர்.....இது  என் பாட்டி இல்லை. தெருவில் மயங்கிக்கிடந்தார். உதவும் எண்ணத்தில் அழைத்து வந்தேன் " என்றார்.

    ஆட்டோ டிரைவர் மனதினுள் "இவ்வளவு நல்ல மனிதரிடம் அநியாயமாகப் பணம் பேசிவிட்டோமே என்று வேதனை அடைகிறார். வைத்தியம் முடிந்ததும் டிரைவரே பாட்டியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி உரியஇடத்தில் இறக்கி விட்டுப் பணம் வாங்க மறுத்து விடுகிறார்.

    மனிதனிடம் மூன்று நிலைகள் உள்ளன.

    1.சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறக்கவேண்டும் என்று அற்பமாக நினைத்தல்

    2.தானும் மனிதனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இரண்டாவது நிலை.

    3.பிறரைவிட சற்றேனும் கூடுதலாக நல்ல குணத்தை வெளிப் படுத்த நினைத்தால் மூன்றாம் நிலை.

    ஆட்டோ டிரைவரிடம் இந்த மூன்று நிலைகளும் படிப்படியாகக் காணப்படுகின்றன.ஒரு தெளிவான மனமாற்றம் ஏற்படுகிறது.

    எல்லா மனிதரிலும் இப்படிப்பட்ட ஈர உள்ளம் இருக்கவே செய்கிறது.ஆனால் மனதின் அடிஆழத்தில்  உள்ளது.

    ஆழ் துளை [borewell]  மூலம் ஈரத்தை வெளிக்  கொணர வேண்டியுள்ளது. இந்த borewell போடும் பணியினைச் செய்வது தான் நமது பெரியோரின் அறிவுரைகள், நன்னெறிப் பாட வகுப்புகள் முதலியன. குழந்தைகளின் உள்ளத்தில் ஈரத்தை வற்ற விடாமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமை.

    மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம்!

    By: ram On: 22:07
  • Share The Gag

  • மங்கல்யான் செயற்கைக்கோள் அனுப்பிய முதல் படம் 'ஹெலன் புயல்'


    ஸ்ரீஹரிக்கோட்டா; செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 5ம் தேதி மங்கல்யான் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.


     தற்போது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் மங்கல்யான், தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

    தற்போது ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்தி வரும் ஹெலன் புயலின் நிலையைதான் மங்கல்யான் தனது முதல் புகைப்படமாக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

    By: ram On: 21:23
  • Share The Gag

  • பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!

    பசலைக் கீரை

     பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

    பாதாம்

     பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

    சிக்கன்

     கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

    அஸ்பாரகஸ்

     கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.

    வெண்டைக்காய் .


    பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

    ஆரஞ்சு
     ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

    ப்ராக்கோலி

     சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    முட்டை

     முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

    சால்மன்

     பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

    தயிர்


     பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

    பூரண குணமடைந்து வீடு திரும்பினார் அப்துல் கலாம்!

    By: ram On: 21:15
  • Share The Gag
  •  உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பூரணகுணமடைந்தார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

    அப்துல்கலாம் சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்துல்கலாமிற்கு சில தினங்களாக கடுமையான காய்ச்சலும் இருந்தது. வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    அதை தொடர்ந்து அப்துல்கலாம் பூரணமாக குணம் அடைந்தார். இதையடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து வௌியேறினார்.

    தற்போது டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள வீட்டில் அப்துல் கலாம் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் நன்றாக இருக்கிறார். வழக்கமான பணிகளில் ஈடுபடுகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அப்துல்கலாம் முழுமையாக குணம் அடைந்து விட்டார். என்றாலும் குறைந்தது 10 நாட்கள் அவர் பயணம் செய்யக்கூடாது என்று வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    82 வயதாகும் அப்துல்கலாம் நாடுமுழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று மாணவர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்..!! குட்டிக்கதைகள்!

    By: ram On: 20:40
  • Share The Gag
  •  

    ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

    தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

    இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

    குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

    இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

    “ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

    அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

    இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

     நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!!

    கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி!

    By: ram On: 20:31
  • Share The Gag
  •  
    காதலில் சொதப்புவது எப்படி' படத்தைப் போலவே 'பண்ணையாரும் பத்மினியும்' படமும் குறும்படமாக இருந்து சினிமாவாகி இருக்கிறது.

    விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், பால சரவணன், நீலிமா ராணி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒரு பிரிமியர் பத்மினி காரை விலைக்கு வாங்கும் பண்ணையார் ஒருவர், அதை ஓட்டத்தெரியாமல் இளைஞன் ஒருவனை டிரைவராக வேலைக்கு வைத்துக் கொள்கிறார்.

    அந்தப் பண்ணையாருக்கும், பத்மினி என்கிற காருக்கும் உள்ள காதல், டிரைவருக்கும் காருக்கும் உள்ள காதல் என்று பல தளங்களில் காதலை  முழுக்க முழுக்க காமெடியாக எடுத்திருக்கிறார்களாம். படத்தில் டிரைவராக நடிப்பவர் விஜய் சேதுபதி.

    இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை மூன்றரை கோடிக்குப் போயிருக்கிறதாம்.

    அதில் இரண்டு கோடியை மட்டும் பணமாக வாங்கிக் கொள்ள சம்மதித்த தயாரிப்பாளர், மிச்ச பணத்தை வைத்து உங்கள் சேனலிலேயே விளம்பரம் செய்து கொடுங்கள் என்று கூறிவிட்டாராம்.

    படத்திற்காக போட்ட பணம் மொத்தமும் இந்த சேட்டிலைட் ரைட்சிலேயே வந்துவிட்டது.  விஜய் சேதுபதிக்கு தினந்தோறும் ஒரு முறை போன் போட்டு நன்றி சொல்லி வரும் இவர், அப்படியே இன்னொரு படத்திற்கும் கால்ஷீட் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.

    மற்ற எல்லாருக்கும் 2017 வரை என் கால்ஷீட் ஃபுல் என்று கூறிவந்த விஜய் சேதுபதி, இவரது அன்பான கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்.

    வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்!

    By: ram On: 20:19
  • Share The Gag
  • 01. அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள்.
    ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள்.
    இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள்
    ஈ. வாழ்க்கை போராட்டம் – உன்னதமாக்குங்கள்.
    உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள்
    ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள்.
    எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள்.
    ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள்
    ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள்
    ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள்.
    ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள்.
    ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள்.


    02. ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

    03. எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை ! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.

    04. கோடை காலத்தில் தனக்கு வேண்டிய உணவை சேகரித்து வைத்துவிட்டு குளிர் காலத்தில் கோடைக்காக பொறுமையுடன் காத்திருக்கிறது எறும்பு உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த பொறுமைசாலியும் கூட.

    05. வாழ்க்கை ஓர் ஓவியம் போன்றது. அது கணிதமல்ல, நிறையப்பேர் வாழ்க்கையை கணிதமாக்கி நாசப்படுத்தியுள்ளார்கள். நீங்களாவது அதை ஓவியமாக்கி சந்தோசமான உலகத்தை உருவாக்குங்கள். எறும்பின் ஞானத்தை பின்பற்றுங்கள்.

    06. மோசமான பறவைகள்தான் தனது கூட்டிலேயே எச்சமிடும் என்பதை உணர்ந்து தனது குடும்பத்தை அழிக்காமல் குடும்பத்தோடு மகிழ்வாக வாழ்வை அனுபவிக்க வேண்டும்.

    07. விவேகமுள்ளவர்களுக்கு சோதனைகள்தான் மிகச்சிறந்த ஆசான்.

    08. உங்களை மாற்றிப் பாருங்கள் இந்த உலகம் எத்தனை சுவாரசியமாக மாறுகிறது என்பதை உணர்வீர்கள்.

    09. பிரபஞ்சம் காலம் இரண்டும் முடிவே இல்லாதவை. இதில் நாம் எங்கே இருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். நீங்களே வாழ்க்கைக்கு வீணான வரையறைகளை போட்டுக்கொண்டு அதுதான் விதியென எண்ணி வாழ்வை குழப்பாதீர்கள்.

    10. விட்டில் பூச்சி விளக்கொளியில் பலியாகிறது, மனிதனோ தனது கற்பனையால் பலியாகிறான்.

    11. உங்கள் போராட்டம் புனிதத் தன்மையோடு அமைய வேண்டும். பலத்தோடு இருப்பதற்காக புனிதத் தன்மையை இழப்பது சிறப்பல்ல. பலத்தை புனிதமான வழியில் உபயோகப்படுத்துவதே பலத்திற்கு சிறப்பு. கோழைகளே பலத்தை தவறான வழியிலும், பழி தீர்க்கவும் பயன்படுத்துவர் என்பதை அறிக.

    12. உயிரோடு இருக்கும் எலி இறந்துபோன புலியை விட பலமானது.

    13. கடினமான வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கும் கொடிய விஷமாகும்.

    14. எல்லாவற்றையும் அரவணைப்பதே அன்பு எதையும் நிராகரிப்பது அன்பல்ல.

    15. நேர்மை ஒரு தெய்வீக ஆணை. அந்த நேர்மை பலன் தரும் ஆனால் சிலருக்கு அது போதியதாக தெரிவதில்லை.

    16. விவேகமற்ற மனிதர்கள் தங்கள் நிழல்களுடனேயே சண்டை போடுவார்கள்.

    17. வில்லில் வீரன் என்பதை வில்லோ அம்போ சொல்லாது அவன் வைக்கும் குறியை அது சரியாக தொடுகிறதா என்பதைப் பொறுத்தே அந்த வீரம் தீர்மானமாகும்.

    18. எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! எந்தக் காலத்திலும் ! நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்.

    19. ஒன்று வழி நடாத்துங்கள் முடியாவிட்டால் வழியைப் பின்பற்றுங்கள், அதுவும் இல்லாவிட்டால் வழியை விட்டு விலகுங்கள்.

    20. திறக்கப்படாத புத்தகம் மரத்துண்டுக்கு சமம் !

    21. உங்கள் மூளையை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்தால் எல்லா அவமதிப்புக்களையும் இலகுவாக தாண்டிவிடலாம்.

    22. மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு அறிவின் அடையாளமல்ல அதுபோல மடமடவென செய்யும் செயல்கள் செயல் திறனின் அடையாளமும் அல்ல.

    23. நீங்கள் பேசிய பேச்சு ! தவறவிட்ட சந்தர்ப்பம் ! நீங்கள் இழந்த ஒரு கணம் ! இவை மூன்றும் திரும்பி வரவே வராது.

    24. சின்னச் சின்னக் கணங்களின் மொத்தமான கூட்டுத் தொகையே நீண்ட வாழ்க்கை அதுபோல இழந்துவிட்ட சின்னச் சின்னக் கணங்களின் கூட்டுத் தொகையே மரணம்.

    25. நன்றாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளே வாழ்க்கையை இனியதாக்கும்.

    26. தாமதப்படுத்துவது என்பது மூளைச் சோம்பலின் இன்னொரு வடிவம்.

    27. சோம்பேறி மனிதன் என்பவன் கடிப்பதற்கோ வாலாட்டுவதற்கோ வலுவற்ற செத்த நாயைப் போன்றவன்.

    28. ஒரு கூர்மையான மனது எந்தக் கதவுகளையும் திறக்கும் அதேபோல ஒரு சேம்பேறி மனதிற்கு கதவுகளை மூடத்தான் தெரியும்.

    29. உங்கள் சந்தோஷத்திற்கான காரணத்தை மாற்றிப் பாருங்கள் பிறகு என்ன நடக்கிறது என்பதை.

    30. மற்றவர்களின் கட்டளைகளை செய்யாதீர்கள், முதலில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள், பிறகு அந்தச் செயலை விரும்புங்கள்.

    பரிசின் தன்மை!

    By: ram On: 08:04
  • Share The Gag
  • மனித உறவுகளில் நாம் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.

    அப்படி இல்லையென்றால் உறவில் விரிசல் வரும்.

    இப்படி நாம் கொடுக்கும் பரிசுகள் நமது சகதிக்குள் இருக்கிறவரை பிரச்சினை இல்லை.

    நம்மால் கொடுக்க இயலாத பரிசினைக் கொடுக்க்ம்போதுதான் பிரச்சினை வருகிறது.

    நண்பர் ஒருவர் உங்கள் ஸ்கூட்டரை ஒருநாள் உபயோகத்துக்குக் கேட்கிறார்.

    உங்களுக்கோ கொடுக்க மனதில்லை.

    மனம் பதைபதைக்கிறது.தரமாட்டேன் என்று சொன்னால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என அஞ்சி வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறீர்கள்.

    அவர் ஸ்கூட்டரைத் திரும்பக் கொடுக்கும் வரை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறீர்கள்.

    அடுத்து இரண்டு நாட்களுக்கு உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அவரிடம் சண்டை போடுகிறீர்கள்.

    என்ன காரணம்?

     ஸ்கூட்டரை இரவல் கொடுப்பது உங்கள் சக்திக்கு மீறின பரிசு.


    ஊனமுள்ள பெண்ணை ஒரு இலட்சியத்திற்காக திருமணம் செய்யலாம்.

    அது ஒரு பெரிய பரிசு என்பதில் சந்தேகமில்லை.

    ஆனால் அந்த மாதிரி பெரிய பரிசைக் கொடுக்குமுன் அதைக் கொடுக்கிற சக்தி நமக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறதா என யோசித்துப் பார்க்க வேண்டும்.

    அவ்வளவு அன்பு இருக்கிறதா என்று நமக்குள் நாமே தேடித் பார்க்க வேண்டும்.

    அது சக்திக்கு மீறிய பரிசாக இருக்கும் நிலையில் அந்தப் பரிசை நம்மால் முழுமையாக மனப்பூர்வமாகக் கொடுக்க முடியாது.

    எனவே அந்த அன்பு இல்லை என்றால் அந்தப் பரிசை வாங்குபவர்களுக்கும் அது நரகமாகிவிடும்.

    அச்சம்!

    By: ram On: 07:54
  • Share The Gag

  • வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

    அது நடந்து முடிந்து விட்டது.அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

    அது நடந்து கொண்டே இருக்கிறது.

    அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.

    ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

    பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?


    ''நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை.

    எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

     அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.

    அதைப்போல இறக்கும் போதும்,அதே உணர்வுடன் தான் இறப்பேன்,''என்று எண்ணுங்கள்.


    மென்சியஸ் என்னும்  சீடன் தன குருவான கன்பூசியசிடம்,'இறந்த பிறகு என்ன நடக்கும்?'என்று கேட்டான்.

    அதற்கு அவர்,''இதற்குப்போய் உன் நேரத்தை வீணடிக்காதே.

    நீ கல்லறையில் படுத்திருக்கும்போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.

    இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்?''என்றார்.

    வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

    By: ram On: 07:28
  • Share The Gag
  • இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும்.இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

    ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது அந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எப்படி இருக்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்.

    போதுமான உறக்கம்.

    இது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல மகிச்சியாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு போவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மனதை லேசாக்கிக் கொள்வது நல்லது. அதிலும் பாட்டு கேட்பது மனதை லேசாக்கும். இதனால் படுத்தவுடன் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

    சத்தான உணவு

    எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்து விட்டு, தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைக் அதிகரிக்கவும். இதனால் உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் அதிகமாகும்.

    அதிகமான நீர்

    தண்ணீரை அதிகம் குடிக்கும் போது, சருமம் பளபளப்பாக இருப்பதால் தோற்றம் பற்றி நம்பிக்கை பெருகுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது.

    உடற்பயிற்சி

    வேகமான நடை, மிதமான ஓட்டம், அறையில் நடனம் இப்படி ஏதாவது ஒன்றை உடற்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலை உறுதியாகவும், மனதை லேசாவும் உணர வைக்கும் ஒரு மாயமே உடற்பயிற்சியாகும்.

    நண்பர்கள்

    உண்மையான நண்பர்களை அருகில் கொண்டிருப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள். மேலும்நாம் எந்த மாதிரியான அன்பையும், மரியாதையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர்களுக்கு வாரி வழங்குங்கள்.

    உதவி


    அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளில் உதவுங்கள். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். இவையெல்லாம் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தூண்டும். இதனால் ஒருவித மனநிறைவு கிட்டும்.

    பொழுதுபோக்கு

    ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை செலுத்துங்கள். அது இசையோ, ஓவியமோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். இதில் கவனத்தை செலுத்தினால், சாதனை புரிய முடியும். மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வளரும்.

    புன்னகையும் சிரிப்பும்

    எதற்கும் சோகபாவம் கொள்ளாமல், நகைச்சுவைக்கு முகம் கோணாமல் இருக்க முயலுங்கள். புன்னகையும் சிரிப்பும் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சில நேரங்களில் உங்கள் புன்னகை, யாரோ ஒருவரின் சோக தினத்தையே வேறுவிதமாக மாற்றக்கூடும்.

    மன அழுத்தத்தை குறைப்பது

    ஒருவரின் ஆரோக்கியத்தை கெடுப்பது மனஅழுத்தம். ஆகவே யோகா போன்ற மனப்பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மேலும் எழுதுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களாலும் மனதை லேசாக்கலாம்.

    வெளியே செல்வது

    நண்பர்களோடு வெளியில் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உறவினர்களை சந்திப்பது அல்லது சந்தோஷத்திற்காக பைக்கில் வெளியே செல்வது அல்லது செல்லப்பிராணியுடன் வெளியில் செல்வது போன்ற ஏதாவது ஒரு செயலை சாதாரண நேரங்களில் செய்தால், மனதில் கஷ்டம் இல்லாமல், மனமும் லேசாகும். ஏனெனில் இதுப் போன்ற சுற்றுச்சூழல் தான் எப்போதுமே மனதை லேசாக்கும் சக்தி கொண்டது.

    நாம் நாமாக இருப்பது

    இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பது, சுமையே. நம்மிடம் இல்லாததற்காக நாம் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைவிட, இருப்பதற்காக வெறுக்கப்படுவது எவ்வளவோ மேல். இதனால் எப்போதும் நாம் நாமாகவே பிரகாசிக்க முடியும்.

    திருமணக் காப்பீடு... கட்டாயம் எடுக்கணும்!

    By: ram On: 07:13
  • Share The Gag
  • அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் இது. கல்யாண ஹாலில் எல்லோரும் சந்தோஷமாக திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, திடீரென மணப்பெண்ணின் பத்து பவுன் தங்க செயின் காணவில்லை. தங்க செயினை யார் எடுத்திருப்பார்கள் என மணப்பெண் வீட்டார் விசாரிக்க ஆரம்பிக்க, மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மீது சந்தேகம் வந்தது. அவரை பெண் வீட்டார் கேள்வி கேட்க, இது மணமகன் வீட்டாருக்குத் தெரிந்தவுடன் அவர்கள் தாம்தூமென்று குதிக்க, கடைசியில் திருமணமே நின்றுபோகும் அளவுக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக, அந்தத் தங்கச் செயின் எப்படியோ திரும்பவும் கிடைத்துவிட, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது. 

    எதிர்பாராமல் திருமணம் தடைபட்டு, இழப்பு ஏற்பட்டால், இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக என்றே  உருவாக்கப்பட்டதுதான் திருமணக் காப்பீடு. நகை திருட்டுக்கான இழப்பீட்டை பெற மட்டுமல்ல;  திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, எதிர்பாராமல் நடக்கும்  அசம்பாவிதங்களினால் ஏற்படும் இழப்பு களுக்கோ இந்த பாலிசி கைகொடுக்கும்.

    இதுகுறித்து விளக்குகிறார் பஜாஜ் கேப்பிட்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர்.


    ''தமிழகத்தில் திருமணம் என்பதை சென்டிமென்ட்-ஆக பார்க்கிறார்கள். எனவே, இந்த இன்ஷூரன்ஸ் எடுப்பதை பலர் விரும்புவதில்லை. இன்ஷூரன்ஸ் எடுப்பதினாலேயே எந்த அசம்பாவிதமும் நடந்துவிடப் போவதில்லை. அது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். 

    திருமண இன்ஷூரன்ஸ் அதிகபட்சம் ஏழு நாட்களுக்குக் கிடைக்கும். திருமண அழைப்பிதழை அடிப்படையாக வைத்து இன்ஷூரன்ஸ் பெறலாம். திருமணத்திற்கு எவ்வளவு நகை, பணம் எவ்வளவு புழங்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவேண்டும். மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டார், திருமணத்திற்கு விருந்தினராக வருகிறவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியை எடுக்கலாம்.  திருமணத்திற்கு முதல்நாள்கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.


    எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

    பணம், நகை திருடுபோனால், விபத்து ஏற்பட்டால், நெருங்கிய உறவுகள் இறந்து அதனால் திருமணம் தடைபட்டால், திருமண மண்டபத்தில் ஏற்படும் சொத்து சேதம் ஆகியவற்றிற்கு கவரேஜ் கிடைக்கும்.  திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டுமே இழப்பீடு பெறமுடியும். வெள்ளம், கனமழை, புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றத்தினால் திருமணம் நின்றாலும் க்ளைம் கிடைக்கும். அதேபோல ஊரடங்கு உத்தரவு, அவசர காலநிலை, தீவிரவாதத் தாக்குதல் போன்றவை 25 கி.மீட்டருக்குள் நடந்து, அதனால் திருமணம் தடைபட்டால்  க்ளைம் கிடைக்கும்.

    எதற்கெல்லாம் கிடைக்காது?

    வரதட்சணை பிரச்னை, காதல் விவகாரங்கள் போன்றவற்றால் திருமணம் தடைபட்டால் க்ளைம் பெறமுடியாது. இந்து கோயில்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க முடியாது. கிறிஸ்தவ ஆலயத்தில் நடக்கும் திருமணத்திற்கு க்ளைம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    க்ளைம்-ல் கழிவு!


    தீ, இயற்கை சீற்றத்தினால் திருமணம் தடைபட்டால் க்ளைம் தொகையில் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், திருமண மண்டபத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால் 5 சதவிகிதம் அல்லது 10,000 ரூபாய், பணம் தொலைந்துவிட்டால் 10 சதவிகிதம் அல்லது 5,000 ரூபாய், நகை தொலைந்துவிட்டால் 5 சதவிகிதம் அல்லது 15,000 ரூபாய், பொதுமக்கள் சேதத்திற்கு 5 சதவிகிதம் அல்லது 25,000 ரூபாய். இதில் எது அதிகமோ அதை க்ளைம் தொகையில் கழித்துவிட்டு மீதித் தொகை மட்டும்தான் கிடைக்கும்.

    பிரீமியம்!


    திருமணம் நிறுத்தப்பட்டால், திருமண மண்டபத்திற்கு சேதம் ஏற்பட்டால், விபத்து அல்லது மரணம் ஏற்பட்டால், நகை, பணம் திருடு போனால் ஆகியவற்றிற்கு தனித்தனியாக தலா 2 லட்ச ரூபாயும், பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டால் ஒரு லட்ச ரூபாயும் மொத்தம் 11 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் சுமார் 3,000 ரூபாய்க்குள்தான்'' என்றார்.

    இனி என்ன, திருமண பட்ஜெட்டில் இன்ஷூரன்ஸுக்கும் ஒதுக்கிடலாமே!