Tuesday 7 January 2014

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?

By: ram On: 18:51
  • Share The Gag





  • புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.

    இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும் ஈடுபட்ட ஊழல்களின் எண்ணிக்கை 27,236. அதாகப்பட்டது, சில ஊழல்களில் கூட்டணி செயல்பட்டிருக்கிறது.

    ஆச்சா? மேற்படி 27,236 ஊழல்களில் 21,848 கேஸ்கள் மிகப் பெரியவை. அதாவது ஊழல் செய்த தொகை பெரிது என்று பொருள். சதவீதக் கணக்கில் சொல்வதென்றால் 80.2 சதவீத ஊழல்கள் பெரும் ஊழல்கள். இந்த எண்பது சதவீத ஊழலில் 16,510 ஊழல்கள் மிக நேரடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த வகையில் சேருபவை. இந்த ரக ஊழல்களில் மட்டும் 23,017 அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இத்தனை ஊழல்கள் நடந்திருந்தாலும் இதில் தேர்ந்தெடுத்த 12,824 ஊழல்களைக் குறித்துத்தான் அரசுக்குப் பெரும் கவலை. இந்தப் பன்னிரண்டாயிரத்தி சொச்ச ஊழல்களின் மொத்த மதிப்பு 910.57 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5670 கோடி) என்பது மட்டுமல்ல காரணம். சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளில் சிலபேரின் பெயர்கள் வெளியே வந்தால் மானம் மரியாதையெல்லாம் மொத்தமாகப் போய்விடும் என்கிற அச்சம்.

    வருஷம் முழுக்க ஊழல் நடக்கும்போது பக்கத்தில் இருந்து கண்காணித்து, நடந்து முடிந்ததும் கர்ம சிரத்தையாக லிஸ்டு போட்டார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. உலகெங்கும் ஊழல் நடந்தபடிதான் இருக்கிறது. சீனாவில் மட்டும் ஒரு டிபார்ட்மெண்ட் இப்படி கர்ம சிரத்தையாகக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரம் கொடுக்கிறது. அதுதான் வித்தியாசம்.

    இத்தனை ஊழலர்களையும் என்ன செய்யலாம் என்று இனி யோசிப்பார்கள். பொலிட் பீரோ தீர்ப்புக் கொடுக்குமா அல்லது காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார்களா என்று இப்போது சொல்வதற்கில்லை. சீனாவின் மிகப்பெரிய பிரச்சினையாக ஊழல் உருவெடுத்து வருவது கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிற சங்கதி.

    என்ன பிரச்சினை என்றால் ஊழல் நடக்கும் இடம் கண்டறியப்படுகிறது. இன்னார் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆதாரங்கள் திரட்ட முடிகிறது. வளைத்துப் பிடிக்கவும் முடிகிறது. ஆனால் நிரூபித்தல் என்று வரும்போது பல வழக்குகள் புஸ்ஸாகிவிடுகின்றன. எனவே சீர்திருத்தங்களை நீதித் துறையில் இருந்து தொடங்கவேண்டும் என்று பலமாகக் குரலெழும்பத் தொடங்கியிருக்கிறது.

    இந்த வருஷம் ஊழலை மெயின் அஜண்டாவாக எடுத்துக்கொண்டு மிகக் கடுமையான தண்டனைகள் மூலம் அச்சம் பரப்பி ஊழலைக் குறைக்க சீன அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஊழலை ஒழிக்கட்டும். நாம் கொசு ஒழிக்க முயற்சி செய்வோம்.

    ஏழு அணிகள், ஏழு வீரர்கள் கொண்ட ஏழு ஓவர் கிரிக்கெட்!

    By: ram On: 18:29
  • Share The Gag


  • துபையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும்.

    இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபையில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோனி, நட்சத்திர வீரர் ரெய்னா ஆகியோர் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிவுப்புகளை வெளியிடுகின்றனர். போட்டிகள் வரும் மார்ச் மாதம் துபையில் நடக்கிறது.

    ‘கேம்பஸ் இண்டர்வியூ’ – அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!

    By: ram On: 13:18
  • Share The Gag


  • கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில் மாணவர்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களுக்கு மட்டுமல்ல… கல்லூரிகளுக்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் முன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்டரை கையில் வாங்கும் இந்த கேம்பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக்கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.

    ‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் 59 மாணவர்கள் சென்னையில் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரிகள் என அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னையில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இதரப் பகுதிகளிலும் இதேபோன்ற போராட்டங்களை மாணவர்கள் நடத்தத் துவங்கியுள்ளனர்.

    “ஆர்டரை மட்டும் வைத்துக்கொண்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கிறோம். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமானது. இது அவர்களின் குரல் மட்டுமல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம்பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம் வெளியில் வரத் துவங்கியுள்ளது. உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் ஐ.டி. துறையில் பணிபுரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.

    “பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாணவர்களின் நலனுக்காக தேடிவந்து வேலை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அதுவல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக்கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார்கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதால், தரமான ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.

    கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரிய வரப்பிரசாதம். சக போட்டிக் கல்லூரிகளை விட ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்துதான் அதிகம் பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று காட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மாணவர்களை சேர்க்கின்றனர். ஆகவே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப்பு ஏற்பாடாகவோ கருத வேண்டியது இல்லை.

    இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம் வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வேலை தராமல் இழுத்தடிப்பது எதனால்? கல்லூரிகளை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல்லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்னணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண்டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அழைத்து வருகின்றன.

    இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வாகும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தராமல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கிராமப்புற மாணவர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வளமாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோருமே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால்தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆனாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.

    ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங்களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்; 3 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள்’ என்று கணக்கு காட்டிதான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க பொருளாதார தேக்கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது என்பதால், புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகின்றன. அல்லது வேலைக்கே எடுக்காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படியே வேலைக்கு எடுத்தாலும் டோட்-1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்துவிட்டு கடைசியாகவே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதைய பிரச்னையின் நதிமூலம்” என்கிறார் செந்தில்.

    ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013-ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவதும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வேலை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள்ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அனைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள்ளைகள். இந்தப் பிரச்னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல்ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…

    “ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர்வாகிவிட்டால் கல்லூரி முடியும்வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்துகொள்ள முடியாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்க… அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக்கிறார்கள்.

    நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப்ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்னை இல்லை, வேலையில் சேர்ந்துவிடலாம். ‘வெட்டியாக வேலைக்காக காத்திருந்தோம்’ என்று சொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனியர்களுடன் போட்டிப் போட வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கும் மிகச் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கின்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொல்கிறார்.

    எனில், இதில் கல்லூரியின் பொறுப்பு என்ன? கேம்பஸ் மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதில் தலையிடலாம்தானே… என்று கேட்கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறுவனங்களை கெஞ்சி கூத்தாடிதான் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்கவில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வரமாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.

    10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொறியியல் படிப்பை விற்கும் கல்லூரிகள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டுகொள்வது இல்லை. ஆனால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல்லூரியில் இருந்து இவ்வளவு பேர் கேம்பஸ் மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது.

    இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப்படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முதலாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்கள் ஒன்று கூடிக்கொள்வார்கள். அவர்களுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிறது. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.

    “இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம்பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழியரையும் தனித்தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படையற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்களையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர்கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

    இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண்மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட்களை தயார் செய்யும் பட்டறை அல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கேம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களிடம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘நன்றாக படி, வேலைக்குப் போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங்கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத்தைப் போல சிந்திப்பதற்கான மூளையை கல்லூரியிலேயே தயார் செய்கிறார்கள்.

    இந்தப் பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வியை கை கழுவிவிட்ட காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங்குவதை பெரிய திருவிழா போல கொண்டாடுகிறது. ப.சிதம்பரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றால் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக்கடனை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வாகிவிட வேண்டும்’ என மாணவர்கள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கியமான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து இறங்கு முகத்தில் செல்லும் நிலையில், இந்த அபாயமான போக்கு இனிவரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

    ‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யும்? அவர்களுக்கு எதிர்பார்த்தது போல ஆர்டர் கிடைத்திருந்தால் வேலைக்கு எடுத்திருப்பார்கள். கிடைக்கவில்லை; எடுக்கவில்லை’ என்று சிலர் சொல்லலாம். அது உண்மையல்ல.. என்னதான் ஆர்டர் குறைந்திருந்த போதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறு பகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாபவெறியின் பலியாடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்திருக்கும் மாணவர்கள்!

    விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!

    By: ram On: 11:07
  • Share The Gag



  • வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை.

     ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம்
    (http://www.visamapper.com/ ) இணையதளம் அமைந்துள்ளது.

    எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமால் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவல்களை இந்த தளம் தருகிறது. அதுவும் எப்படி, அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைப்படத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இண்ட வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளீர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞசள் வண்ணம் என்றால் அன்லைனில் விண்ணபிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

    ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிறகான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான்.

    அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே ,பயனாளி எந்த நாட்டின் குடிமகன் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது ,இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

    அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ’நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று இது ஒரு வழிகாட்டி தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகார்பூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

    இதே போலவே விசாமேப்.நெட்
    (http://www.visamap.net/) எனும் இணையதளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்கள் உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.

    பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்!

    By: ram On: 10:42
  • Share The Gag



  • ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.அத்துடன் பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம்.மேலும் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் தற்போது இரவு நேரத்தில் 96 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்போது பெரும்பாலும் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்களை கேலி செய்வது, செயின் பறிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து இரவுநேர மின்சார ரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, சென்ட்ரல், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ், எழும்பூர், மேற்கு மாம்பலம், தாம்பரம், பரங்கிமலை, திருவள் ளூர், அரக்கோணம், கும்மிடிப் பூண்டி, எண்ணூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

    பயணிகளுக்கு குறிப்பாக பெண் களுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க rpfsakthipadai@gmail.com என்ற இ-மெயில் முகவரியை ரயில்வே பாதுகாப்புப் படை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி,”பயணிகள் குறிப்பாக பெண் பயணிகளின் குறைகளைப் போக்க முக்கியமான 20 ரயில் நிலையங்களில் ஆலோசனைப் பெட்டிகளை வைத்துள்ளோம். அது போல தனி மின்னஞ்சல் முக வரியை ஏற்படுத்தியுள்ளோம்.

    புறநகர் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும்போது திருநங்கைகள் தொந்தரவு, பாலியல் துன்புறுத் தல், கேலி, கிண்டல் போன்ற பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மட்டுமல்லாமல் ரயில் பெட்டி களை சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதிகமாக இருப்பது, மின்விசிறிகள் ஓடாமலும், மின்விளக்குகள் எரியாமலும் இருப்பது குறித்து புகார் கொடுக்கலாம்.

    புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தினமும் திறந்து பார்த்து அதிலுள்ள மனுக்களை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பு வார். பாதுகாப்பு தொடர்பான புகார் என்றால், விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்படும்.

    ரயில்வேயின் மற்ற துறை கள் தொடர்பான புகாராக இருந் தால், உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படும். நடவடிக்கை எடுத்த பிறகு அதுபற்றி புகார்தாரருக்கும் தெரிவிக்கப்படும்

    பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!

    By: ram On: 07:03
  • Share The Gag


  • புதிய உலகத்தில்
    பெரியமனுசியாய்
    கடமைகளுடன்
    கால்தடம் பதிக்கிறாய்.
    வா.
    பெருமையுடனும்
    மரியாதையுடனும்
    வலிமை பொங்க
    நடந்து வா.
    இன்று முதல்
    நீ -
    நம் மக்களின் தாய்.
    நம் தேசத்தின் தாய்.



    பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.


    பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

    மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.

    பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

    ஆண் -பூப்படைதல் சடங்கு

    ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.

    தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.

    ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:


    பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

    நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

    ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்

    ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

    இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

    எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!

    By: ram On: 06:54
  • Share The Gag


  • எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


    மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


                 நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


                மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


                எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


               மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


               உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


           முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


               பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

    நம்பிக்கை....?

    By: ram On: 06:12
  • Share The Gag

  • நம்பிக்கை

    'என் பையன் மிகவும் நல்லவன்' என்று நீ நம்பிவிட்டால், எந்தவித தொல்லையும் உனக்கு இருக்காது.


    பையன் கெட்டவனாக இருக்கலாம்; அதன் விளைவுகளை  அனுபவிக்க வேண்டியவன் அவனே.


    மனைவி உத்தமி, பத்தினி என்று நம்பி விட்டால், உன்னை பொறுத்தவரை காதல் சுகமாகி விடும்.


    தவறான நடத்தைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டியவள் அவளே.


    வேலைக்காரனையும் நம்பி விட வேண்டும்; அதற்கு அவன் துரோகம் செய்தால் அவனை விலக்கிவிடு; அதற்காக யாரைக் கண்டாலும் அவ நம்பிக்கை கொள்ளாதே.


    நம்பிக்கையோடு கோவிலுக்குப் போ.


    'நம்பினார் கெடுவதில்லை' என்பது நான்கு மறை தீர்ப்பு.


    வாஸ்கோடகாமாவின் நம்பிக்கை, புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது.


    கொலம்பஸ்ஸின் நம்பிக்கை, அவன் தாய் நாட்டுக்கு ஒரு புதிய நிலத்தை தந்தது.


    ஆயுதங்களில்லாத சர்ச்சிலின் நம்பிக்கை, இரண்டாவது  உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு வெற்றியை தேடி தந்தது.


    கடலில் விழுந்து தத்தளித்து ஒருவன் இரண்டு மாதங்கள் நீந்திக் கொண்டிருந்தான் என்றும், பிறகொரு கப்பலில் கரை சேர்ந்தான் என்றும் நான் படித்திருக்கிறேன்.


    நம்பிக்கை மட்டும் இல்லாதிருந்தால் அவன் பிணமாகி மீன்களுக்கு இரையாகி இருப்பான்.


    பிரகலாதனின் நம்பிக்கை, கடவுளைக் காட்டிற்று.


    கண்ணனின் நம்பிக்கை பாரத போரில் வெற்றிப் பெற்றது.


    நான் முன்னேறியது  படிப்பினால் அல்ல; நம்பிக்கையால்.


    அப்போது எனக்கு பதினான்கு வயது. கவிதை எழுதுவதில் எனக்குக் கொள்ளை ஆசை.


    ஒரு நாள் அதிகாலையில் எழுந்து நான்கு வரி எழுதினேன்;


    வீணா கானம் விடியுமுன் கேட்டது;
    கானாமிர்தம் காதுக்கினிமை !
    தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்!
    படுக்கையிலிருந்தே பருகினேன் அமுதம்!


    --- இந்த நான்கு வரிக்கு மேல் எழுத தெரியவில்லை. விட்டுவிட்டேன்.


    பதினேழாவது வயதில் முதன் முதலாக முழுக் கவிதை எழுதினேன். அந்த வயதிலேயே ஒரு பத்திரிக்கையில் ஆசிரியரானேன்.


    ஒரு நண்பர் எத்தனை ஆயிரம் ரூபாய் இருந்தாலும் என்னிடம் கொடுத்து வைப்பார்-- நம்பிக்கை.


    நம்பிக்கைக்குத் துரோகம் செய்கிறவன் பெரும் தண்டனைக்கு ஆளாவான்--காண்ணாரக் கண்டிருக்கிறேன்.


    என்னிடம் அநியாயமாகப் பணம் வாங்கியவர்கள், அந்த பணத்தை நியாயமாக செலவழித்தது இல்லை;  அது துரோகத்துக்கு தண்டனை.


    தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னை புகழும்.


    'இது நம்மால்  முடியும்' என்று எண்ணு; முடிந்துவிடும்.


    மனோதிடமும், வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே!


    ஒரு துறையில் முனைந்து நின்று நம்பிக்கையோடு முன்னேறினால், நீ நினைக்கும் அளவுக்குப் புகழும், பொருளும் வந்து சேரும்.


    கடலைக்  கடக்க கப்பலை தந்தது எவனோ ஒருவனின் நம்பிக்கை.


    இவற்றுள் தலையாயது  தெய்வ நம்பிக்கை.


    தெய்வ நம்பிக்கை பொருள் தருகிறது; நிம்மதி தருகிறது; நியாயமாக நடக்க செய்கிறது.


    மருத்துவரிடம் நம்பிக்கை வைத்தால் மருந்தில்லாமலேயே பாதி நோய் தீர்ந்து விடுகிறது.


    நம்பிக்கை உடையவன் தான் வேதந்தியானான், விஞ்ஞானியானான்.


    நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.


    தண்ணீரைப் பால் என்று நம்பினால் அது பால் தான்; வேப்பிலை இனிக்கும் என்று நம்பினால் இனிக்கும்.


    நம்பிக்கைக்கு மிகவும் தேவையானது மனம்.


    அது உன்னிடமே இருக்கிறது; அதற்காக நீ ஒரு பைசாவும் செலவழிக்க தேவை இல்லை.

    -கவியரசு கண்ணதாசன்