Thursday 2 October 2014

Tagged Under: , ,

‘அம்பேல் ஜூட்’ இப்படி படம் எடுத்தால்.... ரசிகர்கள் ஜூட் ...!

By: ram On: 02:29
  • Share The Gag
  • வினோ, கமல், ஆண்டனி, லிபின் நால்வரும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். சிறுவர் இல்லத்தில் வசித்து வரும் இவர்களுக்கு அங்குள்ள வார்டன் ஒருவரால் பாலியல் தொந்தரவு இருக்கிறது. இதை அந்த இல்லத்தின் மற்றொரு வார்டனான பாண்டு கண்டிக்கிறார்.

    ஆனால், பாண்டுவிடமும் அவன் அடாவடித்தனம் செய்ய, இதைப் பார்த்து ஆத்திரமடைந்த நால்வரும் அவனை கொன்று விடுகின்றனர். பின்னர் நால்வரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    சிறையிலிருந்து வெளிவரும் இவர்களை இன்ஸ்பெக்டரான திவாகர், அவருக்கு தெரிந்த நகைக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். நகைத் தொழிலுடன், கடத்தல் வேலைகளையும் செய்துவரும் அந்த கடையின் முதலாளி அவருடைய சுயநலத்துக்கு இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார். கடத்தல் வேலைகளை இவர்களை வைத்து முடித்துக் கொள்கிறார்.

    ஒருகட்டத்தில் நண்பர்களில் இருவர் மட்டும் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவர்களை திருடன் என்று பட்டம் கட்டி போலீசில் மாட்டி விடுகிறார் நகை வியாபாரி. போலீசில் இருந்து தப்பிக்கும் இருவரும் நகை வியாபாரியை கொல்ல திட்டமிடுகின்றனர். இதற்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டரையும் கொல்ல முடிவெடுக்கின்றனர்.

    இதற்கிடையில், நகை வியாபாரியின் மகளான நாயகியை காதலிக்கிறான் நண்பர்களில் ஒருவன். ஆனால், அவனது காதலை அவள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். அவள் வேறு ஒருவனை காதலிக்கிறாள்.

    நாயகியின் அண்ணன், தன்னைவிட வசதி குறைவான பெண்ணை காதலித்ததால் அவனது காதலை எதிர்க்கிறார் தந்தை. இதனால், அவளது அண்ணன் தற்கொலை செய்துகொள்கிறான். ஆனால், ஒருகட்டத்தில் அவன் அண்ணன் தற்கொலை செய்துகொள்ளவில்லை, பணத்துக்காக தன்னை காதலிப்பவன்தான் அவனை கொன்றான் என்பது நாயகிக்கு தெரிய வருகிறது.

    இறுதியில் சுயநலத்திற்காக பழிவாங்கப்பட்ட நண்பர்கள், தங்களின் வாழ்க்கையை கெடுத்தவர்களை பழி தீர்த்தனரா? தன்னை காதலித்தவன் ஒரு கொலைகாரன் என்பதை உணர்ந்த நாயகி என்ன முடிவெடுத்தாள்? என்பதே மீதிக்கதை.

    நாயகர்களாக வினோ, கமல், ஆண்டனி, லிபின் நால்வரும் நடிப்பை கொண்டுவர ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், நடிப்புதான் வரவில்லை. அனைவரும் மிகையான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    நாயகி அஷ்மிதாவுக்கு நாயகிக்குண்டான தோற்றம் இல்லை. இவரது முகத்தில் முதிர்ச்சி மேலோங்கியிருக்கிறது. படத்திலும் அழுத்தமான நடிப்பு இல்லை.

    இன்ஸ்பெக்டராக வருபவர் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். நகை வியாபாரியாக வருபவர் முகத்தில் வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், நமக்கோ இவரைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

    இயக்குனர் டி.எஸ்.திவாகர், படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிளாஷ்பேக் காட்சிகள் வைத்து ரொம்பவும் போரடிக்க வைத்திருக்கிறார். கதையின் திருப்பத்திற்காக ஏகப்பட்ட டுவிஸ்டுகளை வைத்து குழப்பியிருக்கிறார். நிறைய காட்சிகள் நீளமாக வருவதால் ரசிகர்களால் இருக்கையில் அமர முடியவில்லை.

    இவரே படத்திற்கு பாடல்களையும், இசையையும் அமைத்திருக்கிறார். அதில் 2 பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுத்த மோசம். ஆனந்த் மேனனின் ஒளிப்பதிவும் மெச்சும்படியாக இல்லை.

    மொத்தத்தில் ‘அம்பேல் ஜூட்’ ரசிகர்கள் ஜூட்

    0 comments:

    Post a Comment