Wednesday 17 September 2014

Tagged Under:

புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு....?

By: ram On: 20:21
  • Share The Gag
  •  கணவன், மனைவி இடையே புரிதல் இருந்தால் விவாகரத்து எதற்கு..?

    காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும் சரி, பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு கூட இப்போது நீதிமன்ற வாசலை தேடிப் போகின்றனர். பிடித்தால் சேர்ந்து வாழ்வோம், இல்லையா சந்தோசமாக பிரிந்து விடுவோம் என்பது இன்றைக்கு சாதரணமாகிவிட்டது.

    தம்பதியராக இருந்தபோது உயிருக்கு உயிராக இருந்துவிட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இன்றைக்கு திருமணம் நடைபெறுவது என்பது சிரமமான, செலவு ஏற்படுத்தும் விசயம். ஆனால் ஒரு நொடியில் பிரிந்து விடலாம் என்று இருவரும் முடி வெடுக்கின்றனர். எனவே பிரிவு ஏற்படாமல் தவிர்க்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

    உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைவது தாம்பத்ய உறவுதான். பல்வேறு சிறப்புக்களையும் தார்பரியங்களையும் கொண்டதாகவே இந்த திருமண பந்தம் காணப்படுகிறது. கணவன் மனைவி இடையே அன்பை வெளிப்படுத்துவதில் ஏற்படும் தயக்கம்தான் சிக்கலுக்கு காரணமாகிறது. தன்னை நேசிக்கும் கணவரையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். எனவே இதனை கணவன் புரிந்து கொண்டு அடிக்கடி நான் உன்னைக் காதலிக்கின்றேன் சொல்லி மனைவியின் மனதை ஆறுதல் படுத்தவேண்டும்.

    மன்னிப்பது தெய்வ குணம்

    தவறு செய்யாதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இல்லை மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதை விட பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்தவே முற்பட வேண்டும் ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

    சந்தோசமாக பேசுங்கள்

    கணவன் மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள்.

    எந்த சூழ்நிலையிலும் கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தை குறைந்து விடக்கூடாது. மாறாக அவர்களோடு உங்களது பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறைகின்ற போது மணவாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.

    பொறுப்புணர்வு

    குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான். ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது. பணத்தை விட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மை தரக்கூடியது.

    நேர்மறை வார்த்தைகள்

    தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    எதற்குமே இல்லை என்று சொல்வதற்கு முன் இருமுறை சிந்தியுங்கள் நீங்கள் ஆம் என்று கூறுவதனால் உறவு பலப்படுகிறது என்பதை அறிந்து நீங்களே ஆச்சரியமடைவீர்கள்.

    காது கொடுத்து கேளுங்கள்

    மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட இதயப்பூர்வமாக கேளுங்கள். ஏனெனில் அதைத்தான் உங்கள் மனைவி அதிகம் எதிர்பார்க்கிறார்.

    வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

    கணவனும் மனைவியும் சண்டையிட்டு பிரிந்து செல்வதற்கான முக்கிய காரணம் வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சினையாகும் பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல. மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்கா விட்டாலும் நீங்கள் அறிந்து உதவ வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளலாமல் இருக்கின்றனர்.

    ஆரோக்கியத்தில் கவனம்

    பல ஆண்கள் தங்களின் ஆரோக்கியம் பற்றி கவலையில்லாதவர்களாக இருக்கிறார்கள் இது வாழ்விற்கு சிறந்ததல்ல. ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அது ஆரோக்கியமான உங்கள் குடும்ப வாழ்விற்கு அவசியமானதாகும். அதேபோல் மனைவிக்கும் மாதத்தில் சில நாட்கள் விடுமுறை அளியுங்கள்.

    ஏனெனில் ஓய்வற்ற நிலையில்தான் பிரச்சினைகள் எழுகின்றன.அந்த நாளில் உங்கள் மனைவி எந்தக் கவலையும் இன்றி ஓய்வாக இருக்க அனுமதியுங்கள் இவ்வாறான ஒருநாளை பெறுவதானாது அவர்களுக்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் அவசியமானது. இதுவே பிரச்சினைகளுக்கான முற்றுப் புள்ளியாகும்.

    0 comments:

    Post a Comment