Thursday 18 September 2014

Tagged Under:

உறவுகள் முதலில் உண்டானது எப்படி – அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் !!

By: ram On: 22:13
  • Share The Gag
  • மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.

    காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

    அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது.

    தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள்.

    தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

    அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.

    கணவன் மனைவி உறவு, தாய் தந்தை பிள்ளைகள் உறவு, தாயாதிகள் பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

    தந்தைவழித் தோன்றல்களெல்லாம் `பங்காளி’களாகவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் `சம்பந்தி’களாகவும், தாய்வழித் தோன்றல்கள் `தாயாதி’களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

    வார்த்தைகளைக் கவனியுங்கள்.

    தந்தைவழி பங்குடையவன் என்பதாலே `பங்காளி’யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் `தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

    `சகோதரன்’ என்ற வார்த்தையே `சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

    சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகி விட்டன.

    இந்த உறவுகளுக்குள்ளும், பொதுவாகச் சமுகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அவையும் சட்டங்களாகி விட்டன.

    இந்தச் சட்டங்களே நமது சமுகத்தின் கவுரவங்கள்; இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

    இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.

    ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

    இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

    “பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை” என்பது இந்துமதத் தத்துவம்.

    பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

    பெற்ற தந்தையைப் பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான்.

    கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கிறான்.

    தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.

    கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

    ச முக மரபுகள் இவற்றை ஒழுக்கக் கேடாகக் கருதவில்லை.

    முதலில் நமது சமு கங்களுக்கு, `இவையும் ஒழுக்கக் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

    கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளிப் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்க முடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

    அந்த உறவு அந்த இரவுக்கு மட்டுமே!

    அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!

    ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவது போல் சில உறவுகள், சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.

    ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள். யாரோ போகிறார்கள்!

    வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுங்குகிறார்கள்; செத்த பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.

    இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும் போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.

    பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

    அது மனிதனாயினும் சரி, நாய் பூனையானாலும் சரி.

    எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.

    கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.

    0 comments:

    Post a Comment