Friday 3 October 2014

Tagged Under:

இது அழிவை நோக்கிய பயணம்!

By: ram On: 17:00
  • Share The Gag
  • மதுவுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்களோ?! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம். என்னதான் ‘மது உடலுக்கு கேடு விளைவிக்கும்… உயிரைப் பறிக்கும்’ என்று மதுக்கடைகள் தொடங்கி… சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தாலும், சிலர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. மது என்ற விஷயம் குடிப்பவரை மட்டுமல்ல… அவரது குடும்பத்தையும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக்குகிறது. ‘சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்’ என்று சொல்பவர்களில் தொடங்கி, ‘விளையாட்டா ஆரம்பிச்சேன். இப்போ விட முடியலை!’ என்று சொல்பவர்கள் வரை எல்லோரும் வாசிக்கவே இந்தக் கட்டுரை…

    ‘இது அழிவை நோக்கிய பயணம்’

    மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுக்கும் சென்னை டி.டி.கே மருத்துவமனையின் குடிநோய் சிறப்பு மருத்துவர் அனிதா ராவ். அவரிடம் பேசினோம். ”தலைவலி, இருமல், காய்ச்சல் போன்று குடிப்பழக்கமும் ஒருவகை நோய். குடிப்பவர்களை இந்த சமூகம் குடிகாரர்களாகப் பார்க்கிறதே தவிர, நோயாளியாகப் பார்ப்பதில்லை. மதுவைக் குடித்து, அதற்கு அடிமையாவது ஒருவகை நோய். இந்த நோயானது குடிக்கும் எல்லோருக்குமே வருவது கிடையாது. இந்த நோய்க்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

    குடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்த குடி நோயாளிகள் மருத்துவர்கள் உதவியுடன், குடியை முழுமையாக நிறுத்தி நிறைவான, சந்தோஷமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கிக்கொள்ள முடியும். பொதுவாக குடிப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதிகமாகக் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், குடிக்கு அடிமையானவர்கள். இவர்களில் அதிகமாக குடிப்பவர்களும், எப்போதாவது குடிப்பவர்களும் குடிநோயால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குடிக்கும் பழக்கத்தை நினைத்தவுடன் விட்டுவிட முடியும். ஆனால் குடிக்கு அடிமையாகும் குடிநோயாளிகளால் அப்படிச் சுலபமாக குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியாது. குடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அது எந்தக் காரணமாக இருந்தாலும் குடிப்பழக்கம் என்பது அழிவை நோக்கியப் பயணம்!” என்று சொன்னார்.

    ‘ட்ரீட் கலாசாரத்துக்கு பலியான பெண்கள்’

    ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் நிலவரம். இதுபற்றி பெண்கள் சிறப்பு குடி நோய் ஆலோசகரான ஷீபா வில்லியமிடம் பேசினோம். ”நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பெண்கள் இன்றைக்கு மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி ஆண்களைப்போல் அதிகமாகப் பெண்களும் இன்றைக்கு மதுவினை நாடிச்செல்ல மிக முக்கியக் காரணமாக அமைவது, ஆண் நபரின் தூண்டுதல் மற்றும் மரபுவழிப் பழக்கம் என்று சொல்கிறார்கள். ஆண்களைவிட மதுவுக்கு அடிமையாகும் பெண்களே அதிகப்படியான பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.

    குடிக்கும் பெண்கள் எல்லாம் குடிநோய்க்கு அடிமையாவது கிடையாது. அப்படி அடிமையாகும் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீண்டுவருவது கிடையாது. பெண்களில் சிலர் சாதாரணமாகக் குடிக்கத் தொடங்கி குடிநோய்க்கு அடிமையானவர்கள்தான். சென்னையைப் பொறுத்தவரை கலாசார மாற்றமும் பெண்கள் குடிப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாகியிருக்கிறது. இங்கே குடித்தால்தான் ஸ்டேட்டஸ் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

    முன்பெல்லாம் ஏதாவது விழா என்றால் அங்கே பலவித சாப்பாடுகள் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இன்றைக்கு தொட்டதுக்கெல்லாம் ட்ரீட் என்ற கலாசாரம் உருவாகிவிட்டது. பார்ட்டி என்றாலே மது இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஐ.டி கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்கிற வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட பார்ட்டிகளுக்கு குடிக்கவே மாட்டேன் என்ற சுயகட்டுப்பாட்டுடன் செல்பவர்களைக்கூட அங்கிருக்கும் சூழல் மாற்றிவிடுகிறது.

    ‘எல்லாரும் குடிக்குறாங்க… நாம மட்டும் குடிக்காம இருந்தா.. அவங்க நம்மை என்ன நினைப்பாங்க?’ என்று தனக்குள்ளே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு அதற்கான சரியான பதிலாகக் குடிப்பதையே இன்றைய இளையதலைமுறையில் அதிகமானோர் தேர்வு செய்கிறார்கள். சிலரோ, ‘ஒருமுறை குடித்துதான் பார்ப்போமே!’ என்று நினைத்து குடிக்கத் தொடங்கி… பிறகு அதுவே தொடர்கதையாகி விடுகிறது” என்றவர், குடிக்காமல் இருக்க சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.

    ”குடிக்கக் கூடாது என்ற உறுதியுடன் பார்ட்டிக்குப் போகிறவர்கள், போகும் முன்பே வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம். அங்கே உங்களை கிண்டல் அடிப்பார்கள். அதனால் நீங்களே குடிக்க நினைத்தாலும் உங்கள் வயிறு அதை ஏற்றுக்கொள்ளாது. நண்பர்களின் வற்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க, பார்ட்டிக்குச் சென்றவுடனே ஒரு கிளாஸ் டிரிங்க்ஸ் எடுத்து சும்மா கையில் வைத்துக்கொண்டு பார்ட்டியில் அங்கும் இங்கும் சுத்திக்கொண்டு இருந்தாலே போதும். அவர்களை யாரும் குடிக்கச் சொல்லி கேட்கவோ, கட்டாயப்படுத்தவோ மாட்டார்கள். குடிக்கவே மாட்டேன் என்று சொல்பவர்களைத்தான் குடிக்க வைக்க அதிகம் தூண்டுவார்கள்” என்கிறார்.

    விடுபட என்ன வழி?

    குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்ற சந்தேகத்துக்கும் அவரே பதில் சொன்னார். ”ஒரு குடிநோயாளியால் முழுமையாக குடிப்பதை நிறுத்த முடியுமே தவிர, குடிக்கும் அளவைக் குறைக்க முடியாது. அவர் குடிக்கக் காரணம் அவருடைய நோயே. இதற்கு மனைவியோ, பெற்றோரோ, நண்பர்களோ காரணமில்லை. வாக்குறுதி கொடுப்பதால் (சத்தியம் செய்வது) யாரும் குடியை நிறுத்திவிட முடியாது. அதெல்லாம் அதிகபட்சம் ஒரு மாதம் நீடிக்குமே தவிர, குடியை நிறுத்த சாத்தியம் சத்தியத்துக்கு இல்லை. சொல்லப்போனால் இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் அளவுக்கு அதிகமாகவே குடிக்க வாய்ப்பு உண்டு. இப்படி குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தன்நலன் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில்கொண்டு, குடியை நிறுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள சம்மதித்து முன்வர வேண்டியது அவசியம். எப்போதுமே ஒருவரால் அன்பு, அரவணைப்பு, மிரட்டல் அல்லது கண்டிப்பின் மூலமாகக் குடியை நிறுத்திவிட முடியாது. இவர்கள் குடிநோயிலிருந்து மீண்டுவர மருத்துவ மற்றும் மனோதத்துவ ரீதியான சிகிச்சை மிக முக்கியம்.

    போதையில் இல்லாத சமயமாகப் பார்த்து குடிநோயாளியிடம் பேசி அவரை சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்க வேண்டும். குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறவேண்டும். மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கைநடுக்கம், தூக்கமின்மை, தாங்க முடியாத வயிற்று வலி போன்ற பிரச்னைகள் வரலாம். இதற்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சிகிச்சைகளையும் குடிநோயாளிகளுக்கு முதல் வாரத்தில் அளிப்போம். பின்பு மூன்று வாரங்களுக்கு மனோரீதியான சிகிச்சைகள் அளிக்கப்படும். நான்கு வார காலம் இந்த சிகிச்சை தொடரும்.

    இந்த காலகட்டத்தில் நேரத்துக்கு உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றை நோயாளிகளைத் தொடர்ந்து பின்பற்றச் செய்வோம். மேலும், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை ஒன்றிணைத்து அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை ஒருவருக்கொருவர் குழுவாக அமர்ந்து பேச வைப்போம்.

    பெண் நோயாளிகளுக்கு கைவினைப் பொருட்கள் செய்யப் பயிற்சிகள் வழங்குவோம். அடுத்ததாக இங்கு பயிற்சி பெற்று குணமடைந்து சென்றவர்களை வரவழைத்து அவர்களது முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலையை பகிர்ந்துகொள்ளச் செய்வோம். நோயாளியின் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இரண்டு வாரங்கள் கவுன்சிலிங் கொடுப்போம். சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்றவர்களைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மாதம் ஒருமுறை வரவழைத்து ஆலோசனை வழங்குவோம். குடிநோய் குணப்படுத்தக்கூடிய நோய் என்பதை உணர்ந்தாலே போதும்!” என்று அக்கறையோடு சொல்லிமுடித்தார்.

    காசு கொடுத்துப் பிரச்னைகளையும், நோய்களையும் வாங்க வேண்டுமா… என்பதை பாட்டிலைத் திறக்கும் முன்பு யோசிங்க மக்களே!

    0 comments:

    Post a Comment