Saturday 20 September 2014

Tagged Under:

தேவகானம் சிறந்ததா? மனித கானம் சிறந்ததா?

By: ram On: 20:41
  • Share The Gag
  • இசைக் கலையை ஊக்குவித்து வளர்க்கும்
    சோழ மன்னன் ராஜேந்திர சோழன், ஒரு முறை
    தனது அவையில் விநோதமான போட்டி
    ஒன்றை வைத்தார். அந்தப் போட்டி தேவ கானம்
    சிறந்ததா, மனித கானம் சிறந்ததா என்பதே.

    இசையில் வல்ல இரு பெண்கள் போட்டியிட்டனர்.
    தேவதாசி குலத்தைச் சேர்ந்த பெண் தேவ கானம்
    இசைத்தாள். மற்றொரு பெண் மனித கானம்
    இசைத்தாள். இதில் தேவகானம் தெரியாத
    அமைச்சர்கள் மனித கானம் செய்த பெண்ணே
    வென்றதாகக் கூற அவையினர் கரகோஷம்
    எழுப்பினர்.

    உன்னதமாகப் பாடியும் அவையினருக்கு தேவகானம்
    புரியாததால் தான் தோற்றோம் என்பதை உணர்ந்த
    தேவதாசி தான் சார்ந்த திருக்கோவிலில் மனம்
    உருகிப் பாடினாள். அவளது கானத்தைச் செவிமடுத்த,
    வைணவ ஆசாரியரான நாதமுனிகள் அவளது
    இசையைப் பலவாறு புகழ்ந்தார். இதைக் கேள்விப்
    பட்ட மன்னன், ஆசாரியரை அழைத்து வரச் செய்தார்.
    பின்னர் அவரிடம் தேவ கானத்தை அறிந்தவர்
    என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார் மன்னர்.

    நாதமுனிகள் பல்வேறு எடையும் வகையும் கொண்ட
    100 வாத்தியக் கருவிகளைக் கொண்டு வரச்
    சொன்னார். அவற்றை அரசவையில் வைத்து
    ஒவ்வொன்றாக வாசிக்கப் பணித்தார். அவர்கள்
    வாசிக்கும் ஒலியைக் கேட்டு, அந்த வாத்தியத்தின்
    எடையைக் கூற அவை துல்லியமாக இருந்தன.

    மன்னன் அதிசயித்துப் பல பரிசுகளை வழங்க,
    பெருமாள் தொண்டரான அவர், பெருமாளுக்குத்
    தொண்டு செய்வதே பெரிதெனக் கூறிப் பரிசுகளை
    மறுத்தார்.

    நம்மாழ்வார் பிரபந்தங்களோடு ஆழ்வார்களின்
    பாசுரங்களும் பெருமாள் திருக்கோவில்களில்
    பாடப்பட வேண்டும் என்று நாதமுனிகள் விரும்பினார்.
    பெருமாள் திருக்கோவில்களில் பாடப்படும் பகல்
    பத்து விழா மற்றும் இயற்பா சாற்றுமுறை என்ற
    ஒரு நாள் விழா ஆகியவற்றை உண்டாக்கினார்.
    இன்றளவும் அது பின்பற்றப்பட்டுவருகிறது.

    ஒரு நாள் வேட்டையில் இருந்து திரும்பிய சோழ
    மன்னன் நாதமுனிகளைக் காண வந்தபோது,
    அவர் யோகத்தில் இருந்தார். அதனால் அவருடன்
    உரையாட முடியாத மன்னர் நாடு திரும்பிவிட்டார்.
    இவருக்கு யோகம் கலைந்த பின், அங்குள்ள மக்கள்
    அவர் யோகத்தில் இருந்தபோது குரங்கொன்றும்,
    இரண்டு வில்லாளிகளும், ஒரு பெண்ணும்
    வந்திருந்தனர் என்று தெரிவித்தனர். திருக்கோவிலுக்கு
    வந்திருந்தவர்கள் அநுமனும், ராமனும், லட்சுமணனும்,
    சீதையும் என எண்ணிய நாதமுனிகள், அவர்களைத்
    தேடி சோழபுரம் வரை சென்றார்.

    அவரது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும்
    தெரியவில்லை. ஆனால் அநுமன், ராம, லஷ்மண,
    சீதா ஆகிய நால்வரும் அவரது பார்வைக்குத்
    தோன்றித் தோன்றி மறைந்தார்கள். அப்படியே
    மூர்ச்சித்து விழுந்த அவர், வைகுந்த பிராப்தி
    அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
    அப்போது அவருக்கு வயது 94.

    நாதமுனிகள் `நியாய தத்துவம்`, `யோக ரகசியம்`
    ஆகிய நூல்களை எழுதினார்.

    காளம் வலம்புரி அன்ன, நற்காதல் அடியவர்க்கு
    தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்தவள்ளல்
    மூளும் தவநெறி மூட்டிய நாத முனிகழலே
    நாளும் தொழுதெழுவோம் நமக்கார்நிகர் நானிலத்தே.

    என்று வேதாந்த தேசிகர் நாதமுனிகளைப்
    போற்றுகின்றார்.

    நாதமுனிகள், வைணவத்தை பூவுலகில் பரப்ப
    வந்த முதல் ஆசார்யர்.

    0 comments:

    Post a Comment