Monday 29 September 2014

Tagged Under:

எரிபொருளை மிச்சப்படுத்த எளிமையான சில யோசனைகள்

By: ram On: 18:53
  • Share The Gag
  • பெட்ரோல் மற்றும் டீசல் விலை மடமடவென உலக சந்தையில் ஏகிறிக்கொண்டே செல்கின்றது. அதன் இருப்புகளும் தீர்ந்துகொண்டு தான் செல்கின்றது. சராசரி குடியானவன் என்ன செய்ய முடியும்? அதிகபட்சம் தான் சார்ந்திருக்கும் நிறுவனம், சங்கம், அமைப்புகள் மூலம் எதிர்குரல் கொடுக்க முடியும். அரசுக்கு நாம் படும் அவதிகளை சுட்டிக்காட்ட முடியும். அதனை அரசு ஏற்று அதை நடைமுறைபடுத்துகின்றாதா என்பது வேறு கதை. அடுத்த சந்தியினருக்கு நாம் விட்டு செல்வதெல்லாம் அவர்கள் நிம்மதியாக வாழ முடியாத வாழ்கை மட்டுமே. எத்தனை இயந்திரங்கள், நவீன கண்டுபிடிப்புகள் இருந்து என்ன பயன். நிம்மியாக சுவாசிக்க காற்றை நாம் விட்டு செல்லபோவதில்லை, குடிக்க குடிநீரை நிலத்தடியில் விட்டுவைக்கவில்லை, நீளும் இந்த பட்டியல்..

    சரி பெட்ரோல் விலை ஏறுகின்றது என்கின்ற எரிச்சலை தூரப்போட்டுவிட்டு அதனை சரியாக முறையாக எப்படி பயன்படுத்தி நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் எப்படி நல்லது செய்ய முடியும் என்பதனை பார்க்கலாம். சில யோசனைகள்

    1. பிடித்துக்கொண்டே இருக்காதே.
    வண்டி ஓட்டும் போது கைகளை (இருசக்கர வாகனம் ஓட்டுகையில்) கால்களை (நான்குசக்கர வாகனம் ஓட்டுகையில் கிலட்சில்(clutch) அதிகம் வைத்துக்கொண்டு ஓட்ட வேண்டாம். இது அதிக எரிபொருளை செலவு செய்யும்.தேவையான சமயம் மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இது பாதிக்கு பாதி எரிபொருளை மிச்சம் செய்யும். அனேகமாக வண்டி ஓட்ட பழகும் போதே இதனை சொல்லி இருப்பார்கள். மேலும் கிலட்சை பிடித்துக்கொண்டு ஓட்டும் போது எஞ்சின் விரைவில் பாழடைந்துவிடும்.

    2. சன்னலை திற காற்று வரட்டும்
    குளிரூட்டப்பட்ட வாகனத்தில் செல்லும் போது, வெளியே நல்ல தட்பவெட்பம் சூழல் நிலவுகையில் குளிர்சாதன வசதியினை பயன்படுத்தாமல் சாரளத்தை திறந்துவைக்கலாம். இது சுமார் 10% எரிபொருளை மிச்சப்படுத்தும்.

    3. நட ராசா
    நடக்கும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு நடந்தே செல்லவும். வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். இது உடலுக்கும் நல்லது தானே. சைக்கிள் வாங்கும் வசதி இருப்பின் முடிந்த அளவிற்கு அதனை பயன்படுத்தலாம்.

    4. காற்றில்லாத போது அடுத்துக்கொள்
    அடிக்கடி வண்டியில் உள்ள காற்றின் அடர்த்தியினை சரிபார்க்கவும். குறைந்த அடர்த்தியுள்ள வாகனங்கள் 50% சதவிகிதம் வரை அதிக எரிபொருளினை ஏப்பம் விடுமாம். பெட்ரோல் போடும் பொழுதே இதை சரிபார்க்கும் வசதி எல்லாம் பெட்ரோல் நிலையங்களிலும் உள்ளது.

    5. சீர் கேட்காதே, சீராக செல்
    சீரான வேகத்தில் வாகனத்தினை செலுத்தினால் சுமார் 30% சதவிகிதம்வரை எரிபொருளினை சேமிக்கலாம். சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் எப்படி சீரான வேகத்தில் செல்ல முடியும் என்கின்ற கேள்வி நியாயமானதே. பீக் அவர் எனப்படும் நேரத்தை தவிர்த்து அதற்கு முன்னரே அலுவலகத்திற்கு பயனிக்கலாம். அதே போல திரும்பவரும் போதும் அப்படி செய்யலாம். அது அவரவர் வேலையின் தன்மையினை பொருத்ததே.

    6. கம்முனு கெட
    சிக்கலான சிக்னல் இல்லாத ஊரே இல்லை எனலாம். அதுவும் எவ்வளவு நேரம் நிற்கப்போகின்றோம் என்பது கூட நமக்கு தெரியாது. அந்த சூழல்களில் வண்டியினை நிறுத்திவிடுதல் சிறந்தது. முதலில் எரிபொருள் சேமிக்கப்படும், இரண்டு தேவையில்லாத கழிவுக்காற்று, மூன்று சத்தம் குறையும். உர் உர் என்று உருமிக்கொண்டே இருப்பது எரிச்சல்களை ஏற்படுத்தவில்லை?

    7. கனத்தை குறை
    கனமான பொருட்களை வண்டியில் சுமந்து செல்லாதீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே எடுத்து செல்லவும். அதிக எடை அதிக எரிபொருள். மூட்டை முடிச்சுகள் போன்றவைகளையும் அகற்றிவிடவும். தேவையற்ற பொடுட்கள் இருக்கும் போது குளிர்சாதனம் செய்ய அதிக எரிபொருள் தேவைப்படும்.

    8. சுத்தம் சோறு போடும்
    மூன்று மாதத்திற்கு ஒரு முறை வண்டியினை சர்வீஸ் செய்யவும். ஏதேனும் அடைப்பு இருந்தால் சர்வீஸ் செய்யும் போது சரிசெய்யப்படும். முறையாக சர்வீஸ் செய்யாத வாகனங்கள் நிறைய பெட்ரோல் டீசலை குடிக்கும். பெங்களூரில் வண்டியிலிருந்து வெளியேறும் புகையில் எவ்வளவு நச்சு கலந்து இருக்கின்றது, அதன் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதா என்ற சோதனை சான்றிதழ் எல்லா வண்டியிலும் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் கடுமையான கட்டணம் வசூலிக்கப்படுக்கின்றது. இது எல்லா இடத்திலும் வந்தால் நலம்.

    9. பேருந்து பயணம்
    நல்ல பேருந்து வசதி இருக்கும் ஊர்களுக்கும் இடங்களுக்கும் நம் வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பேருந்துகளை பயன்படுத்தலாம். இது கூட்ட நெரிசலையும் குறைக்கும், எரிபொருளையும் மிச்சப்படுத்தும்.

    10. ஒன்றாக செல்லுங்களேன்.
    ஒரே/அடுத்த குடியிருப்பில் வசிக்கும் நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் சேர்ந்து ஒரே இடத்திற்கு செல்லவேண்டுமானால் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வண்டியினை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல நட்பும் கிடைக்கும். அதே போல சுற்றி இருக்கும் மாணவர்கள் ஒரே பள்ளிக்கு செல்லவேண்டுமெனில் தனித்தனி வாகனத்திற்கு பதிலாக ஒரு நாள் நீங்களும், மறுநாள் அடுத்த நண்பர் என பேசி அதன்படி நடக்கலாம்.

    இவை அனைத்தும் உங்களுக்கு தெரிந்தவை தான். என்றாலும் இது ஒரு நினைவூட்டலே. காலத்தின் அவசியமாக மாறிவிட்டது. போராட்டங்களும் முழக்கங்களும் ஒரு புறம் நடக்கட்டும், நாமும் பங்கேற்போம் அதே சமயம் இவற்றையும் நடைமுறை படுத்தலாமே.!!!

    கடைசியாக

    என்னிடம் பணம் உள்ளது, நான் எவ்வளவு எரிபொருள் வேண்டுமானாலும் பயன்படுத்துவேன் என்று நீங்கள் நினைத்தால் உங்களை கட்டுப்படுத்த யாரும் இல்லை. அல்லது வாகனமே வேண்டாம் சாமி எதற்கு? நம்ம முன்னோர்கள் எல்லாம் என்ன காரிலும் பைக்கிலுமா சென்றார்கள் என்று கேட்கலாம். அது நடைமுறைக்கு வந்தால் சந்தோஷம் தான். இவை நம்மால் இயலக்கூடிய சாதாரண விஷயங்கள் தான். நடைமுறைபடுத்திவிட்டால் சிரமம் ஏதும் தெரியாது.

    நமக்காகவும், நம் அடுத்த தலைமுறையினருக்காகவும் இதை பற்றி சிந்தித்தே தீரவேண்டும்.

    0 comments:

    Post a Comment