Tuesday 2 September 2014

Tagged Under:

பல்லி எச்சமிட்ட புண்களா?

By: ram On: 22:26
  • Share The Gag
  • பல்லி எச்சம் இட்டுவிட்டது போலிருக்கிறது. வலிக்கிறது என்றாள் தனது உதடுகளைச் சுட்டியபடி.

    அழகான தடித்த உதடுகள் கொவ்வைப் பழம் போல என்று சொல்ல முடியாது. அதுகருமையான சரும நிறம் வாய்ந்த எம்மவர்களில் காண்பது அரிது. ஆயினும் செம்மை படர்ந்த அவளது உதடு கவர்ச்சியாக இருந்ததை மறுக்க முடியாது. அதில் சிறு சிறு கொப்பளங்கள் வலது பக்கமாகத் தென்பட்டன.

    பல்லி ஏன் உங்களது உதட்டை தேடி வந்து எச்சமிட்டது என நான் கேட்கவில்லை.

    ஆனால் ஏன் எல்லோரது உதட்டை மட்டும் தேடிப்போய் எச்சமிடுகிறது என்ற சந்தேகம் மருத்துவம் படிக்கு முன்னர் என்னிடம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

    ஹெர்பீஸ் சிம்பிளக்ஸ்

    உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய். Herpes Simplex Virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

    ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

    பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும். ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது. இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது. அதுவும் ஓரமாக நடு உதட்டில் அல்ல சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும். பல குழந்தைகளில் நாசித் துவாரங்களிலும் வாயிற்கு உள்ளும் தோன்றுவதைக் கண்டிருக்கிறேன். அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

    முதன்முறை வரும்போது...

    முதல் முதலில் முக்கியமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும். மேலே சொன்ன பெண்ணுக்கு பல தடவைகள் ஏற்கனவே வந்திருந்ததால் வேதனை அவ்வளவாக இருக்கவில்லை. உதடுகளில் மட்டமன்றி நாக்கிலும் வரலாம். கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும். பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து காய்ந்து மறையும்.3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும் வாய் மணமும் இருக்கும். கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்ச்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம். கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப்புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

    மீண்டும் வரும்போது...

    திரும்ப வரும்போது முதல்முறை வந்ததுபோல் கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழித்தபின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

    ஆனால் பெரும்பாலும் தடிமன், காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை Cold Sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார் 56 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ஏன் மீண்டும் வருகிறது?

    நிச்சயமாக எதுவெனத் தெரியாது என்ற போதும் பல சந்தர்ப்பங்கள் அதைத் தூண்டுவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. வெயில், காற்று, மாதவிடாய், காய்ச்சல், சத்திர சிகிச்சைகள், வேறு காயங்கள், மன உளைச்சல் எனப் பல.

    0 comments:

    Post a Comment