Sunday 24 August 2014

Tagged Under: , ,

‘தொட்டால் விடாது’ தொடாமல் இருக்கலாம்...திரைவிமர்சனம்!

By: ram On: 05:47
  • Share The Gag

  • நாயகன் சஞ்சய் துபாயில் வேலை செய்து வருகிறார். தன் நண்பர்களான விவேக், நான்சி, மானஸா ஆகியோருக்காக துபாயில் செய்யும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார். வந்தவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். எங்கேயும் வேலை செய்ய விருப்பம் இல்லாத இவர்கள், சொந்தமாக பிசினஸ் தொடங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி ஒரு ஓட்டலில் நான்கு பேரும் சேர்ந்து பேசி தொழில் தொடங்க திட்டமிடுகிறார்கள்.

    அங்கிருந்து செல்லும்போது ஒரு கூப்பனில் தங்களுடைய செல் நம்பரை பூர்த்தி செய்து விட்டு செல்கிறார்கள். அந்த கூப்பன் மூலம் ஒரு சொகுசு விடுதியில் தங்க வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் நண்பர்கள் அனைவரும் அங்கு செல்கிறார்கள். சொகுசு விடுதியில் நாயகி அஞ்சனாவை சந்திக்கிறார்கள். அனைவரும் அஞ்சனாவிடம் நட்பாகிறார்கள்.

    நண்பர்கள் நான்குபேரும் சொந்தமாக தொழில் தொடங்கவுள்ளதாக அஞ்சனாவிடம் கூறுகிறார்கள். அதற்கு அஞ்சனா இந்த சொகுசு விடுதியை விற்பதாக இருக்கிறார்கள். இதை நீங்கள் வாங்கி சொந்தமாக தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறுகிறாள். அதன்படி அனைவரும் விடுதியை வாங்க முயற்சி செய்கிறார்கள். பின்னர் சொசுகு விடுதியின் உரிமையாளரான தம்பிசார் என்பவரை சந்திக்க செல்கிறார்கள். அவரும் விடுதியை சஞ்சய் மற்றும் நண்பர்களுக்கு விற்றுவிடுகிறார்.

    அதன்பிறகு சஞ்சய் மற்றும் நண்பர்கள் அந்த விடுதியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அப்போது பள்ளம் தோண்டும் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுகிறார். பிறகு அந்த பள்ளத்தில் ஒரு எலும்புக்கூடு இருப்பதை கண்டு சஞ்சய் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். மற்றொரு நாள் அஞ்சனாவிடம் விவேக் விடுதியின் தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது வழியில் ஒரு கேமரா ஒன்றை கண்டெடுக்கிறார். அந்த கேமராவில் பல புகைப்படங்கள் இருக்கின்றன. அதில் சஞ்சனாவின் புகைப்படமும் இருக்கிறது. மேலும் ஒரு புகைப்படக் கலைஞரின் புகைப்படமும் இருக்கிறது. இது யாருடையது? ஏன் இங்கு இருக்கிறது? இதில் உள்ளவர்கள் யார்? என்று அறிய முயற்சி செய்கிறார்கள். அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை வைத்து விடுதியில் எதோ மர்மம் இருப்பதையும் உணர்கிறார்கள்.

    இறுதியில் அந்த விடுதியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் அஜித் ரவி பிகாசஸ் நடித்துள்ளார். நடிப்பை வரவழைக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். படத்தில் நிறைய காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அதிக நேரம் நடந்தே வருகிறார். அஞ்சனாவாக நடித்திருக்கும் நாயகி சனம் அழகாக நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக விடுதி உரிமையாளராக வரும் தம்பிசாரின் நடிப்பு ரசிக்கும்படியாக உள்ளது.

    வினோத் வேணுகோபால்-சாம் சிவா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு கூடுதல் பலம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. குறிப்பாக துபாயின் அழகையும் ஒரு சில காட்சிகளையும் தனது கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் அழகாக படம் பிடித்துள்ளார்.

    குறிப்பாக படத்தில் நீண்ட காட்சிகள், மெதுவாக நகரும் காட்சிகள் ஆகியவற்றை தயாரிப்பாளரும், இயக்குனருமான அஜித் ரவி பிகாசஸ் தவிர்த்திருக்கலாம். இயக்குனருக்கு விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் பார்க்கும் போது விளம்பர படத்தை பார்ப்பது போல் தோன்றுகிறது. திரைக்கதையை வலுவோடு எடுத்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘தொட்டால் விடாது’ தொடாமல் இருக்கலாம்.

    0 comments:

    Post a Comment