Wednesday 10 September 2014

Tagged Under: , , ,

இந்திய சிகரெட்டில் நிகோடின் அதிகம் ; ஆண்‌டுதோறும் கேன்சர் நோய் அதிகரிப்பு!

By: ram On: 07:46
  • Share The Gag
  •  உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட அளவை கட்டிலும் இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் மற்றும் கேடு விளைவிக்கும் தார் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புகைப்பிடிப்போர்களின் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


    இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வுக்கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆய்வுக்கூடம் முதன்முதலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரிலும் , தொடர்ந்து முக்கிய நகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது.

    கண்காணிப்பு தொழிலகம் வருகிறது :

    இது குறித்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்: லாபம் மற்றும் விற்பனையின் முக்கியத்துவம் கருதி இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் அளவீடு கொண்ட சிகரெட் விற்கப்படுகிறது. இது உலக அளவின் வரைமுறையை விட அதிகம். மத்திய புகையிலை ஆய்வு தொழிற்கூடம் சமீபத்தில் சிகரெட்டுகளை ஆய்வு செய்ததில் உயர்மட்ட அளவில் நிகோடினும், தாரும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது மிக ஆபத்தான விஷயம் என்கின்றனர் இந்த அதிகாரிகள்.

    10 மில்லி கிராம் தார் :

    உலக அளவில் கட் ஆப் ரேஞ்ச் படி ஒரு சிகரெட்டில் 10 மில்லி கிராம் தார் அளவு இருக்கலாம். ஆனால் இந்திய சிகரெட்டுகளில் 15 மி. கிராம் தார் இருப்பதாக கூறுகின்றனர். அது போல் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை விட நிகோடின் அதிகம் உள்ளது. அதாவது ஒரு சிகரெட்டில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவு ஒரு மில்லிகிராம். இதனை விட அதிகம் அளவீடு இருப்பதாகவும் தெரிகிறது.

     இது மத்திய புகையிலை சட்டத்தின் மீறல் ஆகும்.
    சென்னை, மும்பையில் ஆய்வு மையம்: இது போன்ற சிகரெட் அளவீடுகளை கண்காணிக்க சண்டிகாரில் ஒரு தலைமை ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இது போல் மண்டல அளவில் சென்னை, மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, நகரங்களிலும் அமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணியில் மத்திய சுகாதார அதிகாரிகள் சண்டிகார் செல்லவுள்ளனர். இங்கு சில ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வகத்தில் பணியாற்றும் நிபுணர்களுக்கு அமெரிக்காவின் ஜாவ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி மூலம் சில பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் நகரங்களில் காற்றில் நிகோடின் அளவு குறித்த மானிட்டர்களும் நிறுவப்படவிருக்கிறது.

    மேலும் சிகரெட்டுகள் தயாரிப்பு விவரங்கள் அதில் உள்ள கன்டெய்ன்ஸ் தகவல்கள் துல்லியமாக சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறவேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மற்றும் பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வரப்படவிருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்று செயல்படும் நேரத்தில் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் நோய் அளவை குறைக்க முடியும் என மருத்துவ ஆர்வலர்கள் தெரிவித்தனர்,

    30 லட்சம் பேருக்கு கேன்சர் :

    சமீபத்திய மத்திய அரசின் புள்ளிவிவர கணக்கின் படி நாட்டில் 29 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம் .

    0 comments:

    Post a Comment